சீமான் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் கொடுத்தது தேர்தல் ஆணையம்! சபாஷ் சரியான தேர்வு!
சென்னை: சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருக்கிறது. சீமான் கேட்டிருந்த கரும்பு சின்னம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு தேர்தலிலும் தனித்து போட்டியிட்டு கவனம் பெற்று வருகிறது நாம் தமிழர் கட்சி. சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு 2019, 2021-ல் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது.

ஆனால் தற்போதைய லோக்சபா தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயம் சின்னம் ஒதுக்கப்படவில்லை. தேர்தல் ஆணையத்திடம் தாமதமாக விண்ணப்பித்ததால் சீமான் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கவில்லை. இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி வழக்கு தொடர்ந்தது. ஆனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம். இதனால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.
அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சியினர் புதிய சின்னம் ஒன்றை தேர்வு செய்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தனர். முதல் கட்டமாக ஆட்டோ சின்னத்தை கேட்டது நாம் தமிழர் கட்சி. ஆனால் வேறு ஒரு கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுவிட்டதாக தேர்தல் ஆணையம் அறிவிக்க மீண்டும் ஏமாற்றமடைந்தார் சீமான்.
இந்நிலையில் கப்பல், படகு, மைக், தீப்பெட்டி, ஜன்னல், செருப்பு உள்ளிட்ட பல சின்னங்களை சீமான் தரப்பு பரிசீலனை செய்தது. இதில் தற்போது நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் நாம் தமிழர் கட்சியினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மேடைகளில் மைக் முன் நின்றாலே நரம்பு புடைக்க கைகளை உயர்த்தி பேசுவது வழக்கம். நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் சீமான் பாணியில் மைக் முன்பு உரத்து பேசி முழக்கம் எழுப்புவர். இப்போது ஒட்டுமொத்தமாகவே நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னமே ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications