தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாட்கள் லீவு.. வெளியான அதிரடி உத்தரவு
சென்னை: லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகள் வரும் 17ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை 3 நாட்கள் மூட உத்தரவு வெளியாகியுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்றும் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி கிடையாது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிந்து இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலும் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே இருப்பதால் தேர்தல் களம் அனல் பறக்கிறது. தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையமும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கெல்லாம் கூடுதல் கண்காணிப்பு பணிகளை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மாநிலம் முழுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்காளர்களுக்கு கொடுக்க பணம், பரிசுப்பொருட்கள் எதுவும் கொண்டு செல்லப்படுகிறதா என கண்காணிக்க வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது. ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமாக ஆவணங்கள் இன்றி கொண்டு செல்ல தடை உள்ளது. இதனால், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். வாக்குப்பதிவை சுமூகமாக நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் ஜூன் 04 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்குபதிவின் போது அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுபோன்ற பல்வேறு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
முன்னதாக, வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19 ஆம் தேதி அன்று பொது விடுமுறை நாளாக அறிவித்து நேற்று அரசாணை வெளியானது. இதற்கான ஆணையை தமிழ்நாடு ஆளுநரின் உத்தரவின் பேரில் தமிழக அரசின் தலைமை செயலர் சிவதாஸ் மீனா பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கிணங்க, தமிழகத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி, அன்றைய தினம் தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது என அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications