உங்கள் வாக்கை உங்கள் குடும்பத்தினர் செலுத்த முடியுமா.. "ஆம் முடியும்.." ஆனால் ஒரு ட்விஸ்ட் இருக்கு
சென்னை: ஒரு வேலை உங்களால் நேரில் வர முடியவில்லை என்றால் உங்கள் வாக்கை வேறு ஒருவரால் செலுத்த முடியுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இதற்கான பதிலைப் பார்க்கலாம்.
நமது நாட்டில் நாளை தொடங்கி லோக்சபா தேர்தல் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஜூன் 1ஆம் தேதி கடைசிக் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் நிலையில், அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

தமிழ்நாடு உட்பட பல பகுதிகளில் நாளை முதல்கட்டத்திலேயே வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிரச்சாரங்கள் ஓய்ந்த நிலையில், வாக்குச்சாவடிகளை ரெடி செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
லோக்சபா தேர்தல்: தமிழ்நாட்டில் மொத்தம் 39 தொகுதிகள் இருக்கும் நிலையில், இந்த முறை இங்கே பல முனை போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக தனது தலைமையில் ஒரு கூட்டணியை அமைத்துக் களமிறங்குகிறது. சில ஆண்டுகளாக அதிமுக உடன் இணைந்து பயணித்து வந்த பாஜக இந்த முறை தனியாகக் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. இது தவிர நாம் தமிழர் கட்சியும் தனியாகக் களமிறங்குகிறது.
இப்படிப் பல முனை போட்டி ஏற்பட்டு இருப்பதால் அனைத்து தொகுதிகளிலும் கடைசி வரை பிரச்சாரம் அனல் பறந்தது. மேலும் பல சிறிய கட்சிகள், சுயேச்சைகள் எனப் பலர் போட்டியிடுகிறார்கள். இதனால் மாநிலம் முழுக்க மொத்தம் சுமார் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். புதுச்சேரி லோக்சபா தொகுதியில் 26 பேர் போட்டியிடுகிறார்கள். தமிழ்நாட்டைப் பொருத்தவரை அதிகபட்சமாகக் கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். மேலும், நாகப்பட்டினம் லோக்சபா தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகிறார்கள்.
சந்தேகம்: இங்கு நம்மில் பலருக்கும் சில சந்தேகங்கள் இருக்கும். அதாவது அனைவரும் வாக்களிக்க நேரில் வர வேண்டுமா.. தபால் வாக்குகளை யார் எல்லாம் பயன்படுத்தலாம்.. சிறை கைதிகள் வாக்களிக்க முடியுமா எனப் பல சந்தேகம் இருக்கும். அதற்கான பதிலை நாம் பார்க்கலாம். முதலில் சிறை கைதிகளைப் பொறுத்தவரைத் தண்டனை பெற்று சிறையில் உள்ள ஒருவருக்கு வாக்குரிமை இல்லை. எனவே, தண்டனை குற்றவாளிகளால் தண்டனை காலம் முடியும் வரை வாக்களிக்க முடியாது.
தபால் வாக்குகள்: அடுத்து தபால் வாக்குகள்.. அனைவராலும் தபால் மூலம் வாக்களிக்க முடியாது.. முன்பு ராணுவம் உள்ளிட்ட குறிப்பிட்ட சேவைகளில் வேலை செய்வோர்.. தேர்தல் பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் மட்டுமே தபால் மூலம் வாக்களிக்க முடியும். கடந்த சில தேர்தல்களில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 80 வயதைத் தாண்டிய முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்கைச் செலுத்த முடியும். இருப்பினும், தமிழ்நாட்டில் அதற்கான காலக்கெடு முடிந்துவிட்டது.
அடுத்து உங்களுக்குப் பதிலாக வேறு ஒருவரால் வாக்களிக்க முடியுமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். கள்ள ஓட்டுகளைச் சொல்லவில்லை.. அனுமதி பெற்று முறையாகவே வேறு ஒருவரால் உங்கள் வாக்கைச் செலுத்த முடியுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். முடியும் என்பதே இதற்கான பதில். இருப்பினும், அனைவருக்கும் இந்த அனுமதி வழங்கப்படுவதில்லை.
சிலருக்கு மட்டும் விதிவிலக்கு: ராணுவம் மற்றும் ஆயுதப் படையைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட சிலருக்கு மட்டும் இந்த உரிமை வழங்கப்படும். இதற்கான அத்தாட்சி முன்கூட்டியே கடிதத்தைப் பெற்று, பதிவுசெய்தால் மட்டுமே இதுபோல ஒருவரது வாக்கை மற்றொருவரால் செலுத்த முடியும். வாக்குப்பதிவு நாளன்று இதுபோல அனுமதி பெற்று குடும்பத்தில் உள்ள மற்றவருக்கான வாக்கைச் செலுத்த வருபவருக்கு, ஆள்காட்டி விரலுக்குப் பதிலாக நடு விரலில் மை வைக்கப்படும்.












Click it and Unblock the Notifications