திருவள்ளூர் வேட்பாளரை மாற்ற வேண்டும்.. தமிழக காங்கிரசில் குழப்பம்.. 2 பேர் தீக்குளிக்க முயற்சி!
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி, திருவள்ளூர் தொகுதி வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் சென்னை சத்தியமூர்த்தி பவனில் போராடி வருகிறார்கள்.
சென்னை: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி திருவள்ளூர் தொகுதி வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் சென்னை சத்தியமூர்த்தி பவனில் போராடி வருகிறார்கள். இதில் இரண்டு பேர் அங்கு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலுக்காக தமிழக அரசியல் களம் பெரிய பரபரப்பாக இருக்கிறது. தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. இதில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் ஒன்றாக இடம் பிடித்து இருக்கிறது.
இந்த கூட்டணிக்கு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மொத்தம் 10 இடங்களில் போட்டியிட இருக்கிறது.
சீனியர்களுக்கு "ஓய்வு" கொடுக்கும் கட்சிகள்.. அத்வானி, ஜோஷி வரிசையில் ஓரங்கட்டப்பட்ட முலாயம்சிங்!
வேட்பாளர் அறிவிப்பு
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்: திருவள்ளூர் (தனி), கிருஷ்ணகிரி, ஆரணி,கரூர், சிவகங்கை, திருச்சி, தேனி, விருதுநகர், குமரி, புதுச்சேரி, ஆகும்.இதற்கான வேட்பாளர்கள் நேற்று முதல்நாள் இரவு அறிவிக்கப்பட்டார். சிவகங்கை தொகுதிக்கு மட்டும் காங்கிரஸ் கட்சி இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.
என்ன கோரிக்கை
இந்த நிலையில் திருவள்ளூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்து இருக்கிறது. திருவள்ளூர் தனித் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ஜெயக்குமார் போட்டியிடுகிறார். ஆனால் இவருக்கு பதிலாக திருவள்ளூரில் காங்கிரஸ் ஏஸ்சி/எஸ்டி பிரிவு மாநிலத் தலைவர் செல்வபெருந்தகைக்கு வாய்ப்பு வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தீக்குளிப்பு
இதற்காக இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி முன்பு சென்னை சத்தியமூர்த்தி பவனில் போராட்டம் நடந்தது. அங்கு செல்வப்பெருந்தகை ஆதரவாளர்கள், தொண்டர்கள் ராஜவேல், சீனு ஆகியோர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ்
அதேபோல் சென்னை சத்தியமூர்த்தி பவனில் செல்வப்பெருந்தகை ஆதரவாளர்கள் பலர் செய்த போராட்டத்தால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து தற்போது அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள் . அங்கு மிகவும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.