பூரண மதுவிலக்கு, சீமை கருவேல மரங்கள் அழிப்பு… மதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியீடு
Recommended Video

சென்னை: 17-வது மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை மதிமுக சார்பில் இன்று வெளியிடப்பட்டது.
சென்னை எழும்பூரில் உள்ள கட்சியின் தலைமையகமான தாயகத்தில் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டார்.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுகவுக்கு, மாநிலங்களவை உறுப்பினர் பதவியும், ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில், ஈரோடு தொகுதியில் மதிமுகவின் பொருளாளர் அ. கணேசமூர்த்தி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
அதிமுக, திமுக கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில், மதிமுக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் முக்கிய அறிவிப்பாக, பூரண மதுவிலக்கு, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை, ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டும் என்பவை இடம் பெற்றுள்ளன.
மேலும், மின்சார சட்ட திருத்த முன்வடிவு 2018-யை திரும்பபெற வேண்டும், இணையதள வணிகத்திற்கு தடை, நியூட்ரினோ திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும், சீமை கருவேல மரங்கள் அழிக்கப்பட வேண்டும் உள்ளிட்டவை தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, 1500 ரூபாய் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் வாக்கு கிடைக்கும் என அதிமுக அறிவிப்பு செய்துள்ளது. ஆனால் பணம் வாங்கி மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் மக்களுக்கு விழிப்புணர்வு இருப்பதாகவும் கூறினார்.
மேலும், இந்த ஆண்டு மாற்றம் நிறைந்த ஆண்டாக இருக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications