இது குடும்ப அரசியல்.. ஓபிஎஸ் மகன் போட்டியிட்டால் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.. டிடிவி பேட்டி
லோக்சபா தேர்தலில் போட்டியிட இருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமின் மகன் ரவீந்திரநாத்திற்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிட இருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமின் மகன் ரவீந்திரநாத்திற்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 லோக்சபா தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் நபர்களின் விருப்ப மனுக்கள் நேற்றில் இருந்து பெறப்பட்டு வருகிறது. பலர் அதிமுக சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்து இருக்கிறார்கள். முக்கிய நபர்கள் பலர் நேற்றே விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்பம் தெரிவித்தும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமின் மகன் ரவீந்திரநாத் விருப்ப மனு பெற்றுள்ளார். இவர் அதிமுகவில் நீண்ட காலமாக உறுப்பினராக இருக்கிறார்.
ஆனால் இவர் எந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார் என்ற தகவல் வெளியாகவில்லை. இவர் பெரும்பாலும் தேனி அல்லது அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் போட்டியிட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
இந்த நிலையில் இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஓபிஎஸ்ஸுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா? அவர்தான் எப்போதும் குடும்ப ஆட்சிக்கு எதிராக பேசினார். ''ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து அதிமுகவை மீட்பேன்'' என்றார். இப்போதே அவர் மகன் தேர்தலில் நிற்கிறார்.
இதை மக்கள்தான் கேட்க வேண்டும். மக்கள் இதை பார்த்துக் கொள்வார்கள். தேனீ மக்கள் ஓ.பன்னீர்செல்வத்தை புறக்கணிப்பார்கள். அவரின் குடும்பத்தையும் புறக்கணிப்பார்கள்.
இதை எல்லாம் குடும்ப ஆட்சி இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிடுவார் என்றார் அதைவிட பெரிய நகைச்சுவை வேறு கிடையாது. இவர் எங்கள் மீது குடும்ப ஆட்சி செய்வதாக புகார் வைக்கிறார், என்று டிடிவி தினகரன் தனது பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications