திமுக மீது செல்ல கோபம்தான்.. சீமான் திடீர் பல்டி! அப்ப 'அதை' கழற்றி காண்பிச்சது? வன்னி அரசு கேள்வி!
சென்னை: திமுக மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது தமக்கு இருப்பது செல்ல கோபம்தான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி தந்திருப்பது அரசியல் களத்தில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
நாம் தமிழர் கட்சியினர் தமது மேடைகளில் பாஜக, காங்கிரஸை மிக கடுமையாக விமர்சிப்பது வழக்கம். அதனைவிட மிக கடுமையாக திமுகவை வசைபாடுவதும் வாடிக்கை.
சமூகவலைதளங்களில் திமுகவுக்கு பாஜக எதிராக கருத்துகளை முன்வைப்பதைவிட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்தான் அதிகம் பதிவிட்டு வருகின்றனர். திமுக, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை இழிவாக பேசியதற்காக நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
சவுக்கு சங்கர் மீதான புதிய வழக்குகளை வாபஸ் பெற்று அரசு விடுதலை செய்ய வேண்டும்: சீமான் அப்பீல்
ஆர்.எஸ்.எஸ். மென்மை முகம் நாம் தமிழர்?
நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரையில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக உள்ளது. தேர்தலில் சொற்ப வாக்குகளைப் பெற்றாலும் தனித்தே போட்டி என்பதில் கவனமாகவும் இருக்கிறது. இது பாஜகவுக்கு எதிரான திமுக கூட்டணியின் வாக்குகளுக்கு வேட்டும் வைக்கிறது. அத்துடன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நிஜமுகமாக பாஜக; மென்மை முகமாக நாம் தமிழர் கட்சி செயல்படுகிறது என்கிற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
எடப்பாடியின் வியூகம்
தற்போது 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் தொடர்பான பேச்சுகள் தொடங்கிவிட்டன. அதிமுக தலைமையில் ஒரு மெகா கூட்டணி அமையும் என்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அதில் ஓபிஎஸ், சசிகலா, தினகரனுக்கு இடமில்லை என்றும் திட்டவட்டமாக சொல்கிறார் எடப்பாடி. அப்படியானால் திமுக கூட்டணியை உடைத்து அதில் இருந்து வெளியேறும் கட்சிகளுடன் அதிமுக கூட்டணி வைக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. திமுகவின் இப்போதைய கூட்டணி கட்சிகள் அனைத்தும் பாஜகவை உக்கிரமாக எதிர்க்கின்றன. அப்படியான கட்சிகளுடன் அதிமுக கூட்டணி வைத்தால் பாஜகவின் எதிர்காலம் என்னவாகும் என்கிற கேள்வியும் எழுகிறது.
திரிசங்கு நிலையில் பாஜக
பாஜகவைப் பொறுத்தவரையில் ஒருங்கிணைந்த அதிமுகவின் தோளில் சவாரி செய்வதுதான் எளிதானது; அறுவடைக்குரியது என கணக்குப் போடுகிறது. இதற்காக அதிமுகவை ஒருங்கிணைக்க படாதபாடுபடுகிறது. ஆனால் எடப்பாடி தரப்போ இதை முற்று முழுதாக நிராகரிக்கிறது. பாஜகவுக்கு தற்போதைய வாய்ப்பு தினகரனின் அமமுக உள்ளிட்ட சில கட்சிகள்தான்.
திமுகவை நோக்கி மநீம
அதேநேரத்தில் திமுகவை நோக்கி மக்கள் நீதி மய்யம் நெருங்கி செல்வதாகவும் பார்க்கப்படுகிறது. அண்மைக்காலமாக திமுகவுடன் இணக்கமான கருத்துகளை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்து வருகிறார். சென்னையில் 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் கமல்ஹாசன் நேற்று ஆலோசனை நடத்தி இருந்தார்.
சீமானின் திடீர் பல்டி
இந்நிலையில் விகடன் குழுமத்துக்கு நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார். அப்பேட்டியில் திமுகவில் பலரின் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. தனிப்பட்ட முறையில் எனக்கு அவர்களுடன் எந்த பகையும் கிடையாது. முதல்வர் ஸ்டாலினையே என் அண்ணனைப் போல்தான் பார்க்கிறேன். நான் அவரை விமர்சிப்பது கூட அண்ணன், தம்பி சண்டைதான். அவர் மீது உள்ளது செல்லக் கோபம்தான். அதற்காக பொது எதிரியான பாஜகவினரை உள்ளேவிட முடியாது என கூறியுள்ளார்.
வன்னி அரசு பொளேர் கேள்வி
தற்போதுவரை பாஜகவின் பங்காளியாக திமுகவை கட்டமைத்து பிரசாரம் செய்து வருபவர் சீமான். இப்போது திடீரென திமுக மீதும் முதல்வர் ஸ்டாலின் மீதும் சீமான் பாசமழை பொழிவது பல சந்தேகங்களையும் விவாதங்களையும் கிளப்பி உள்ளது. 2024-ம் ஆண்டு தேர்தலை மனதில் வைத்துதான் சீமான் இப்படி பேசுகிறாரா? என்கிற கேள்வியும் எழுகிறது. வழக்கம் போல தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, கிரவுண்ட் ஒர்க்கில் திமுகவுடன் இணக்கமான சூழலை ஏற்படுத்த தயாராகி வருகிறதா? என்பதும் அரசியல் பார்வையாளர்களின் கேள்வி.
இதனிடையே திமுகவின் கூட்டணி கட்சியான விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, சீமானுக்கு ஒரு கேள்வி எழுப்பி உள்ளார். அதாவது பொது மேடை ஒன்றில் திமுகவினரி காலணியை கழற்றி அடிப்பேன் என கழற்றி காண்பித்து சீமான் பேசியிருந்தார். அதனை சுட்டிக்காட்டியுள்ள வன்னி அரசு, அப்ப செருப்ப காட்டியதும் செல்ல கோபம் தானா அண்ணா? என சீமானுக்கு கேள்வி கேட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.