சுரங்க பாதைக்கு வரவேண்டாம்னு எச்சரித்தும் ராயபுரம் சுரங்கத்தில் சிக்கிய லாரி.. 2 மணி நேரம் போராட்டம்
சென்னை: சென்னை ராயபுரம் தொகுதிக்குட்பட்ட மூலக்கொத்தளம் பகுதியில் உள்ள சுரங்கபாதையில் லாரி ஒன்று சிக்கிக் கொண்டு போராடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி, வடகிழக்கு பருவமழை என எல்லாம் ஒன்றாக வந்துவிட்டது. இதனால் எப்போதும் இல்லாத அளவுக்கு கனமழை பல இடங்களில் பெய்து வருகிறது.
சாலைகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளது. மாவட்ட தலைநகரில் உள்ள முக்கிய சாலைகளிலும் தண்ணீர் வழிந்தோடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம்
வடசென்னையின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ராயபுரம், வியாசர்பாடி, புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சென்னை புறநகர் பகுதிகளிலும் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. இந்த தண்ணீரில் வேறு வழியின்றி செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே மழைநீரில் சிக்கி போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தி வருகின்றன.

சுரங்க பாதை
சென்னையின் பெரும்பாலான சுரங்கப் பாதைகளில் 3 அடி வரை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் அவ்வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை ராயபுரம் தொகுதிக்குட்பட்ட மூலக்கொத்தளம் பகுதி உள்ள சுரங்கப் பாதையில் லாரி ஒன்று சிக்கிக் கொண்டது. ரிவர்ஸ் எடுத்தும் எடுக்க முடியாமல் 2 மணி நேரமாக சிக்கியது.

தகவல்
உடனே அருகில் இருந்தவர்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வண்ணாரப்பேட்டை போலீஸார் ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு லாரியை பாதுகாப்பாக மீட்டு அனுப்பினர். சுரங்கப் பாதையில் செல்ல வேண்டாம் என அப்பகுதி மக்கள் அறிவுறுத்தியும் ஓட்டுனர் சுரங்கப் பாதையில் இறங்கியதால் லாரி சிக்கி கொண்டு இது போன்ற நிகழ்வு ஏற்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வாகனங்கள்
இனி இது போல் சுரங்க பாதைகளில் வாகனங்களை இயக்க வேண்டாம் என போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். இன்றைய தினம் மழையானது ஈசிஆர் பகுதியிலிருந்து அப்படியே ஆரம்பிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் மக்கள் உணவு பொருட்களை வாங்கிக் கொள்ளுமாறு மாநகராட்சி அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications