ராயப்பேட்டையில் கோடீஸ்வர புள்ளி! அதிமுகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ் மார்ட்டின்!
சென்னை: பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவியும், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் மாமியாருமான லீமா ரோஸ் மார்ட்டின் ஐஜேகேவில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார் லீமா. வரும் சட்டமன்ற தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் அறியப்பட்ட பிரபல தொழிலதிபரும் லாட்டரி அதிபருமான மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் மார்ட்டின் ஐஜேகேவின் பொதுச் செயலாளராகவும், பின்னர் இணை பொது செயலாளர் பதவியையும் வகித்து வந்தார்.
இந்த நிலையில் கட்சிகள் தனக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனக் கூறி கட்சியின் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரடியாக அறிவித்தார்.

லீமா ரோஸ் மார்ட்டின்
அதிமுக தலைமையுடன் நெருக்கம் காட்டி வந்த லீமா ரோஸ் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வகுப்பு தாக்கல் செய்ததாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் விரைவில் அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் சந்திப்பை மேற்கொள்ளலாம் எனவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் அதிமுக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்திருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் திருவாடானை தொகுதியில் போட்டியிட அவர் விருப்பமனு தாக்கல் செய்திருக்கும் நிலையில் அந்த தொகுதியை தவிர்த்து வேறு ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் லீமா ரோஸ் அதிமுகவில் இணைந்திருக்கிறார்.
அதிமுக
இந்த நிலையில் வரும் இருபதாம் தேதி லீமா ரோஸின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் அதிமுகவில் இணை இருக்கின்றனர். இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. தமிழக மட்டுமல்லாது புதுச்சேரி அரசியலிலும் பேசப்படும் ஒரு பெயராக மாறி உள்ளது மார்ட்டின் குடும்பம். தமிழகத்தில் லாட்டரி சீட்டுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், ப்யூச்சர் கேமிங் நிறுவனம் மூலம் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் முதலீடு செய்து வந்திருக்கிறார் மார்ட்டின்.
தமிழக அரசியல்
அவரது மகனான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரி பாஜகவில் இருந்தார். பிறகு விலகி லட்சிய ஜனநாயக கட்சி என்ற கட்சியை புதுச்சேரியில் தொடங்கி இருக்கிறார். மருமகனான ஆதவ் அர்ஜுனா வாய்ஸ் ஆப் காமன் நிறுவனத்தின் மூலம் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திமுகவுக்கு வேலை பார்த்தார். பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்த அவர் அந்த கட்சியில் இருந்து வெளியேறி தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறார்.
2026 சட்டமன்ற தேர்தல்
இதற்கிடையே மார்ட்டினின் மனைவியான லீமா ரோஸ் மார்டின், முதலில் பாஜகவில் பயணித்தார். பின்னர் 11 ஆண்டுகளுக்கு முன்பு பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது அவருக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பதவியும், பாரிவேந்தரின் மகன் ரவி பச்சமுத்து அரசியலுக்கு வந்ததும் இணைப் பொதுச் செயலாளர் பதவியும் கொடுக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன் அக்கட்சியில் இருந்து விலகிய அவர் தற்போது அதிமுகவில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications