வலிமை இழக்கும் காற்றழுத்த தாழ்வு..4 மாவட்டங்களில் கனமழை இருக்கு.. உஷார் மக்களே!
சென்னை: தென்மேற்கு வங்க கடலில் நிலவுகின்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திர, தமிழக-புதுவை கடற்கரை நோக்கி நகர்ந்து காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும். இதன் காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் தொடங்கினாலும் மிக கனமழை, அதி கனமழையாக கொட்டி தீர்க்கிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், டெல்டா மாவட்டங்களில் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.
சென்னையில் பெய்த மழையால் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது. சில நாட்கள் மழை ஓய்வெடுத்த காரணத்தால் வெள்ள நீர் வடிந்தது. இதனிடையே வங்கக் கடலில் கடந்த வாரம் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டது. இந்த முறை வானிலை மையம் கணித்தது போல பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலு குறையும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வலிமை குறையும் காற்றழுத்த தாழ்வு
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்மேற்கு வங்க கடலில் நிலவுகின்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திர, தமிழக-புதுவை கடற்கரை நோக்கி நகர்ந்து காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும்.

4 மாவட்டங்களில் மழை
இன்று வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

லேசான மழை
25 மற்றும் 26ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் கனமழை
நகரின் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தரைக்காற்று சில நேரங்களில் மணிக்கு 20-25 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 30 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
ஆந்திர கடலோரப்பகுதிகள், தமிழக-புதுவை கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 22ஆம் தேதி காலை வரை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும். மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications