போலீஸ் பாதுகாப்புடன் டோல் கட்டணம் வசூல்.. ஈரோடு அம்மாப்பேட்டை சுங்கச்சாவடியில் பரபரப்பு!
ஈரோடு: அம்மாப்பேட்டை சுங்கச்சாவடியில் மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும், மே 19ஆம் தேதி நள்ளிரவு முதல் அதிகாரப்பூர்வமாக சுங்கக் கட்டண வசூல் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க சுங்கச்சாவடி பகுதியில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு - பவானி - மேட்டூர் - தொப்பூர் இடையிலான சுமார் 85 கிலோமீட்டர் இருவழிச் சாலை, முன்பு 7 மீட்டர் அகலத்தில் இருந்தது. இந்தச் சாலையை 10 மீட்டர் அகலத்துக்கு விரிவாக்கம் செய்ய ரூ.242.40 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சாலை மேம்பாட்டுப் பணிக்காக செய்யப்பட்ட செலவை வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை துறை டோல் அமைக்க அனுமதி கொடுத்த நிலையில் அம்மாப்பேட்டையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது.

இந்த சுங்கச்சாவடிக்கு உள்ளூர் மக்கள், விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் தொடக்கம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை, உள்ளூர் வாகனங்கள் மற்றும் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று புகார் அளித்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து பவானி எம்எல்ஏ கருப்பண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர, 2025 ஜூன் மாதம் நீதிமன்றம் தற்காலிக இடைக்காலத் தடை விதித்திருந்தது.
இந்த வழக்கு மற்றும் பல்வேறு தாமதங்களுக்குப் பிறகு, மே 15ஆம் தேதி கட்டண வசூல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, இறுதியாக மே 19ஆம் தேதி நள்ளிரவு முதல் சுங்கக் கட்டண வசூல் முழுமையாகத் தொடங்கியுள்ளது.
இந்த சுங்கச்சாவடியில் கட்டணங்கள் முழுக்க டிஜிட்டல் முறையில் மட்டுமே வசூலிக்கப்படுகின்றன. FASTag அல்லது UPI மூலம் மட்டுமே பணம் செலுத்த முடியும். FASTag இல்லாத வாகனங்கள் அல்லது போதிய இருப்பு இல்லாதவர்கள் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் விதிகளின்படி கூடுதல் அபராதம் செலுத்த வேண்டும்.
தற்போது சுங்கச்சாவடி பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. மக்களின் எதிர்ப்பு தொடரும் பட்சத்தில் அடுத்த சில நாட்களில் பெரிய அளவிலான போராட்டங்கள் நடக்க வாய்ப்பு உள்ளதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல் நாள் வசூலை போலீஸ் பாதுக்காப்புடன் செய்த டோல் நிர்வாகம் இனி வரும் நாட்களில் எத்தகைய நடவடக்கை எடுக்கும்?
தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் தற்போது சுமார் 75 முதல் 80 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சுமார் 73 முதல் 75 சுங்கச்சாவடிகளை நிர்வகிக்கிறது.
தேசிய நெடுஞ்சாலைகளில் சுமார் 50-52 பெரிய சுங்கச்சாவடிகள் உள்ளன.
மாநில சாலைகளில் சென்னை வெளிவட்ட சாலை (4), கிழக்கு கடற்கரை சாலை (1), மதுரை வெளிவட்ட சாலை (3) உள்ளிட்டவை அடங்கும்.
ஒரு சாதாரண கார், ஜீப் அல்லது வேன் ஒரு தடவை செல்ல 40 முதல் 135 ரூபாயை வரையிலான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் ஒவ்வொரு சுங்சாவடிக்கும் மாறுப்படும். சுங்கக் கட்டணங்கள் ஆண்டுக்கு இருமுறை (செப்டம்பர் 1 மற்றும் ஏப்ரல் 1) திருத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்களின் பயணம் தொடர்ந்து காஸ்ட்லியாகி வருகிறது.














Click it and Unblock the Notifications