Bengaluru: ஒரு பாலத்துக்கு ஆசைப்பட்டது தப்பாபோச்சே.. மடிவாளா, கோரமங்களா மக்கள் புலம்பல்!
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய மேம்பாலப் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான நிதியை திரட்டுவதற்கு வாகன ஓட்டிகளிடம் டோல் கட்டணம் வசூலிக்காமல், சொத்து உரிமையாளர்களிடம் கூடுதல் வரி வசூலிக்க அரசு ஆலோசித்து வருகிறது. இந்த புதிய முயற்சி பெங்களூரு மக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்ன திட்டம்?
சுவாமி விவேகானந்தா மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து சில்க் போர்டு சந்திப்பு வரை சுமார் 11 கிலோமீட்டர் நீளமுள்ள மேம்பாலப் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகளை பெங்களூரு ஸ்மார்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (B-SMILE) தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மதிப்பு சுமார் 1,300 கோடி ரூபாய்.
இந்த மேம்பாலம் இந்திரா நகர், தொம்லூர், கோரமங்களா, மடிவாலா போன்ற முக்கிய வணிக மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த பகுதிகள் வழியாக செல்லவிருக்கிறது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டோல் கட்டணம் ஏன் இல்லை?
வழக்கமாகப் பெரிய மேம்பாலங்கள் அல்லது சாலைத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டால், அதற்கான செலவை வாகன ஓட்டிகளிடம் 'டோல்கேட்' (Toll) வசூல் செய்வதன் மூலமே அரசு ஈடுசெய்யும். ஆனால் இந்த 11 கிலோமீட்டர் மேம்பாலப் பாதைக்கு டோல் கட்டணம் வசூலிப்பது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று விரிவான திட்ட அறிக்கை (DPR) தெளிவுபடுத்தியுள்ளது.
வழக்கமான நெடுஞ்சாலைகளைப் போல இல்லாமல், இந்த மேம்பாலப் பாதையின் வடிவமைப்பு (Corridor's discontinuous geometry) ஒரே சீராக இல்லாமல் ஆங்காங்கே துண்டிக்கப்பட்ட அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும், நகரின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் வாகனங்கள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் ஏதுவாகப் பல இணைப்புச் சாலைகளும், சரிவுப் பாதைகளும் (Multiple ramps) இதில் அமைக்கப்படவுள்ளன.
இதனுடன் பெங்களூரு நகருக்குள் இயங்கும் பல்வேறு வகையான கலப்பு போக்குவரத்து நெரிசலும் (Mixed urban traffic conditions) சேர்ந்துகொள்வதால், இந்த மேம்பாலத்தில் டோல்கேட்களை அமைத்து சுங்கக் கட்டணம் வசூலிப்பது நடைமுறைக்குச் சாத்தியமற்ற ஒன்று என இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
சொத்து உரிமையாளர்களிடம் கூடுதல் வரி?
இதற்கு மாற்றாக, மேம்பாலம் அமையவிருக்கும் பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்களிடம் இருந்து கூடுதல் வரி வசூலிக்க அரசு ஆலோசித்து வருகிறது. இதை 'வேல்யூ கேப்சர் ஃபைனான்சிங்' என்று அழைக்கிறார்கள்.
இந்த மேம்பாலம் வருவதால் அந்த பகுதிகளில் உள்ள நிலங்கள், வீடுகள் மற்றும் வணிக கட்டடங்களின் சந்தை மதிப்பு அதிகரிக்கும். இந்த மதிப்பு உயர்வில் ஒரு பகுதியை வரியாக அரசு எடுக்க திட்டமிட்டுள்ளது.
கிரேட்டர் பெங்களூரு அத்தாரிட்டி (GBA) மூலம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் வருடாந்திர சொத்து வரியுடன் (Property Tax) சேர்த்து, இந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரியையும் (Infrastructure Levy) இணைத்து வசூலிக்கலாம் என்று அந்தத் திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதை தற்போதுள்ள சொத்து வரியுடன் இணைத்து வசூலிக்கலாம் என்று திட்ட அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இறுதி முடிவு இன்னும் இல்லை
இந்த திட்ட அறிக்கையில் சொத்து வரி மூலம் நிதி திரட்ட பரிந்துரை செய்திருந்தாலும், இதுகுறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்று B-SMILE அமைப்பின் மேலாண் இயக்குநர் மகேஷ்வர் ராவ் தெரிவித்துள்ளார்.
மடிவாலா, கோரமங்களா உள்ளிட்ட பகுதி மக்கள் இந்த திட்டத்தால் தங்களுக்கு போக்குவரத்து வசதி கிடைக்கும் என்று நினைத்தனர். ஆனால் இப்போது தங்களுக்கு கூடுதல் வரிச் சுமை வருமா என்று அஞ்சத் தொடங்கியுள்ளனர்.
இந்த புதிய நிதி மாதிரி பெங்களூருவில் முதன்முறையாக அமலுக்கு வருமா, இல்லையா என்பதை அடுத்த சில வாரங்களில் அரசு எடுக்கும் முடிவு தீர்மானிக்கும். உள்கட்டமைப்பு வசதி அதிகரிப்பதற்கு யார் பணம் செலுத்த வேண்டும் என்ற கேள்வி தற்போது பெங்களூரு மக்களிடையே பெரும் விவாதமாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications