திமுக பாஜக அதிமுக எல்லாம் ஒரே புடலங்காய் தான்.. தவெகவுடன் சேர்ந்ததும் மார்க்சிஸ்ட் கடும் விமர்சனம்
சென்னை: சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் சூழல் அடியோடு மாறியுள்ளது. திமுக கூட்டணி உடைந்துவிட்டது. அதிமுக கட்சியே உடைந்து பல முன்னாள் அமைச்சர்கள் தவெக, திமுக கட்சிகளில் இணைந்து வருகிறார்கள். திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளிடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் மீது திமுக முரசொலி நாளிதழில் கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டது. இதற்கு சிபிஎம் அளித்துள்ள பதிலில், அதிமுக பாஜகவுடன் திமுகவை ஒப்பிட்டு எல்லாம் ஒரே புடலங்காய் என்று விமர்சித்துள்ளனர்.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவடைந்தும் தமிழக அரசியல் களத்தின் சூடு குறையவில்லை. திமுக, அதிமுக ஆகிய 2 கூட்டணிகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கூட்டணி நிலைப்பாடுகள் தொடர்பாக கட்சிகளின் கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன. தேர்தலுக்கு முன்பு திமுக மிகவும் பலம்வாய்ந்த கூட்டணியாக கருதப்பட்டது. கொள்கை கூட்டணியாக தோழமை உணர்வுடன் பயணித்து வந்தனர். தேர்தலுக்கு பிறகு திமுக கூட்டணி சிதறிவிட்டது.

திமுக சிபிஎம் மோதல்
காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் கட்சிகள் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் தவெக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் அந்த கட்சிகளுடன் திமுக கருத்து மோதலில் ஈடுபட்டு வருகிறது. அதிமுக ஆட்சியமைக்க திமுக ஆதரவளிப்பதாக எடுத்த முடிவுக்கு 2 கம்யூனிஸ்ட்கள், விசிக, ஐயூஎம்எல் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக மீது விமர்சனங்களும் வைக்கப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், தற்போதைய அரசியல் சூழலில் கடந்த காலங்களில் இருந்தது போன்ற திமுக தலைமையிலான கூட்டணி அமைப்பு இல்லை அரசியல் சூழ்நிலைகள் மாறியுள்ளன. தேர்தல் நேரத்தில் உருவாகும் கூட்டணிகள், அந்தந்த கால அரசியல் சூழ்நிலையைப் பொறுத்து அமையும். திமுக கூட்டணி என்கிற ஒன்று இப்போதில்லை. வரும் காலத்தில் திமுக - அதிமுக ஒன்றிணைந்து செயல்பட்டாலும் ஆச்சர்யமில்லை என்று கூறினார்.

எல்லாம் ஒரே புடலங்காய்
காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட்கள் மீது திமுகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. முக்கியமாக சிபிஎம் மாநில செயலாளர் சண்முகத்தை விமர்சித்து திமுகவின் முரசொலி நாளிதழில் இன்று விமர்சன கட்டுரை வெளியிடப்பட்டது. புதிய அரசியல் சூழலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடும் என்கிற பெயரில் சண்முகம் எழுதிய கட்டுரைக்கு பதிலாக முரசொலியில் கட்டுரை எழுதப்பட்டது.
முரசொலி கட்டுரைக்கு பதிலளிக்கும் வகையில் சிபிஎம் கட்சியின் எக்ஸ் பக்கத்தில் ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பாஜக + திமுக + அதிமுக எனும் கொள்கை புடலங்காய் சிபிஎம் கட்சிக்கு எப்போதும் இல்லை. திமுக வெளியில் வேறு; உள்ளே வேறு" என்று குறிப்பிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் ஒரு புடலங்காயில் பாஜக, திமுக, அதிமுகவி சின்னங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. வெளியில் வேறு மாதிரி காட்டி கொண்டாலும் பாஜக, அதிமுக போலதான் திமுகவும் என்று விமர்சித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications