எத்தனை வயதானால் என்ன? வியட்நாம் கம்பெனியின் மினியேச்சர் காருடன் சிரிச்சு சிரிச்சு விளையாடிய விஜய்
சென்னை: "வின்" குழுமத்தினர் கொடுத்த பொம்மை காரை வைத்துக் கொண்டு தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் விளையாடி கொண்டிருந்த வீடியோ வைரலாகி வருகிறது.
முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில் தொழிலதிபர்கள், திரைத்துறையினர், கல்வி ஆர்வலர்கள், பத்திரிகை, ஊடகவியலாளர்கள் என ஏராளமானோர் சந்தித்து வருகிறார்கள்.

அதிலும் பெரும்பாலும் டிவிஎஸ், ஹூண்டாய் உள்ளிட்ட தொழில் நிறுவனத்தின் சிஇஓக்களும் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் வியட்நாம் நாட்டின் முன்னணி கார் நிறுவனமான "வின்" குழுமத்தின் (Vin Group) ஆசிய பிரிவு நிர்வாக இயக்குநர் பாம் சான் சாவ் (Pham Sanh Chau) சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து பேசினார்.
அப்போது வின் குழுமத்தின் சார்பில் முதல்வருக்கு சிறிய மாதிரி வடிவ கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. அந்த காரை வாங்கிய விஜய், அந்த குழுவினர் சென்றதும் அதை பிரித்து, அதன் கதவுகளை திறந்து பார்த்து விளையாடிக் கொண்டிருந்தார்.
இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 52 வயதிலும் பொம்மை காரை வைத்து விஜய் விளையாடியது அவரது கட்சியினர், ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பலர் "ண்ணோவ் நீங்க நிறைய ஒஸ்தி கார்களை எல்லாம் வைத்திருக்கீங்க, இந்த பொம்மை காரை வைத்து விளையாடுறீங்களே, குழந்தைண்ணா நீங்கள்" என ஜாலியாக கிண்டல் செய்கிறார்கள்.
மற்றும் சிலர் எத்தனை வயதானால் என்ன, பொம்மை கார் கிடைத்துவிட்டால் அப்படியே நம் குழந்தை பருவத்திற்கு சென்றுவிட வேண்டியதுதான் என்கிறார்கள்.
ஏற்கனவே விஜய் டிஃபன் கேரியரில் சாப்பாடு கொண்டு வந்து சாப்பிடுவது, காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்திற்கு வந்து மாலை 5 மணிக்கு வீட்டிற்கு செல்வது என இருந்து வருகிறார்.
தலைமைச் செயலகத்திற்கு ஒன்று கோட் சூட்டில் வருகிறார். இல்லாவிட்டால் பட்டு வேட்டி சட்டையில் வந்துவிடுகிறார். முதல்வராக பதவியேற்ற போது நேரு விளையாட்டரங்கில் அமைச்சர்களுடன் குழு புகைப்படம் எடுக்க அங்கிருந்த டேபிளை ஊழியர்களுடன் சேர்ந்து அவரும் தூக்கினார்.

விஜய்யை சுற்றி பாதுகாப்பு வளையங்கள் இருந்தாலும் அவர் இத்தனை எளிமையாக இருக்கிறார் என்கிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முன்னிலையில் 9.7.2026 அன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், திருநெல்வேலி மாவட்டம், சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில், 15,037 கோடி ரூபாய் முதலீட்டில், 2,670 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், விக்ரம் சோலார் நிறுவனத்தின் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (Battery Energy Storage Systems - BESS) உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அது போல் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் 10.7.2026 அன்று, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், அடிடாஸ் நிறுவனத்திற்காக 850 கோடி ரூபாய் முதலீட்டில், 6,750 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில், கரூர் மாவட்டத்தில் தோல் அல்லாத காலணிகள் இரண்டாம் கட்ட உற்பத்தி ஆலை அமைப்பதற்குக் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.















Click it and Unblock the Notifications