இந்து மதத்தை அவமதிக்கும் ஓவியங்கள்.. மன்னிப்பு கேட்டது லயோலா கல்லூரி
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் நடந்த வீதி விருது விழா என்ற நிகழ்ச்சியில் இந்து மதத்தை அவமதிக்கும் வகையிலான ஓவியங்கள் இடம் பெற்றிருந்ததற்கு கல்லூரி நிர்வாகம் மன்னிப்பு கேட்டது.
சென்னை லயோலா கல்லூரியின் மாணவர் அரவணைப்பு மையமும், மாற்று ஊடக மையமும் இணைந்து வீதி விருது விழாவை ஜனவரி 19,20 ஆகிய இரு நாட்கள் நடத்தின. லயோலா கல்லூரியில் நடந்த இந்த விழாவில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், தன்னார்வ கலைஞர்கள் சங்கம், நாட்டுப்புற கலைஞர்கள் அமைப்பு ஆகியன நடத்தின.

புகார் மனு
இந்த விழாவில் ஓவிய கண்காட்சியும் நடந்தது. இதில் இந்து மதத்தையும் பிரதமர் நரேந்திர மோடியையும் ஆர் எஸ் எஸ் அமைப்பையும் அவதூறாக சித்தரிக்கும் வகையில் ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதை கண்டித்து இந்து மக்கள் கட்சி, பாஜக, இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிஷத் ஆகியன சென்னை மாநகர காவல் ஆணையருக்கு புகார் மனுவை அனுப்பியது.

தொடர்பில்லை
இது குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், நிகழ்ச்சியில் ஓவியங்கள் வைப்பதற்கு முகிலன் என்பவர் ஸ்டால் கேட்டார். அவருக்கு ஸ்டால் கொடுத்ததை தவிர ஓவியங்களுக்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றார்.

செயல்
இதையடுத்து கல்லூரி நிர்வாகம் மன்னிப்பு கோரியது. இதுகுறித்து அந்த நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் வீதி விருது விழாவுக்கு நாங்கள் கொடுத்த அனுமதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையிலான எந்த செயலையும் நாங்கள் ஆதரிக்கவில்லை.

ஓவியங்கள்
குறிப்பிட்ட மதத்தை புண்படுத்தும் வகையில் எங்கள் கல்லூரியில் ஓவியங்கள் இடம்பெற்றதற்கு நாங்கள் வருத்தத்தோடு மன்னிப்பும் கோருகிறோம். சர்ச்சைக்குரிய ஓவியங்கள் கண்காட்சியில் இருந்தது குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டவுடன் உடனே அவற்றை நீக்கிவிட்டோம் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications