8 வழிச்சாலை திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம் அனுமதிக்கப்படாது.. திமுக அரசின் அடுத்த அதிரடி
சென்னை: 8 வழிச்சாலை திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவை தமிழகத்தில் அனுமதிக்கப்படாது என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது திமுகவின் அடுத்த அதிரடியாகவே பார்க்கப்படுகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை- சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கு அப்போதைய அதிமுக அரசும் அனுமதி அளித்தது. இதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியும் இந்த திட்டத்தை செயல்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் அந்த பாதையில் உள்ள விவசாய நிலங்கள், காடுகள், மலைகள் உள்ளிட்டவை சாலைகளாக மாற்றப்படும். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
கொரோனா தடுப்பு.. அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு.. நாளை மீட்டிங்.. சூப்பர்!
செயற்கை
இயற்கையை அழித்து செயற்கையாக ஒரு சாலை எதற்கு என்பதுதான் விவசாயிகளின் கேள்வியாக உள்ளது. ஏற்கெனவே சென்னையிலிருந்து சேலம் செல்ல நல்ல தரமான நெடுஞ்சாலை உள்ள நிலையில் 8 வழிச்சாலை எதற்கு என்ற கேள்வி எழுந்தது.
நிலத்தடி நீர்
அது போல் ஹைட்ரோகார்பன் திட்டத்தால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் சூழல் எழும். விவசாய நிலங்கள் தரிசாகும். மேலும் ஹைட்ரோகார்பன் திட்டத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். இதனால்தான் இந்த திட்டங்களுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மத்தியில் எதிர்ப்பு நிலவி வருகிறது.
காட்டுப்பள்ளி துறைமுகம்
திமுக தனது தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும், எட்டு வழிச்சாலை திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம், காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்க திட்டம் உள்ளிட்டவை அனுமதிக்கப்படாது என தெரிவித்திருந்தது.
அன்பில் மகேஷ்
அந்த வகையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் அதிரடியாக தேசிய கல்விக் கொள்கை தமிழகத்தில் நுழைய முடியாது என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். அது போல் நீட் தேர்விற்கு விலக்கு அளிப்பது குறித்து முடிவு செய்த பிறகுதான் பிளஸ் 2 தேர்வு எனபள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.
ஹைட்ரோ கார்பன் திட்டம்
இந்த நிலையில் எட்டு வழிச்சாலை திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவை அனுமதிக்கப்படாது என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இவ்வாறு மத்திய அரசின் திட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் திமுக அரசு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.