"அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை!" கடலுக்குள் கருணாநிதிக்கு நினைவுச் சின்னம்! அமைச்சர் மா.சு பரபர
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவுச் சின்னமாகக் கடலில் பேனா போன்ற அமைப்பு உருவாக்கப்படும் எனச் செய்திகள் வெளியான நிலையில், இது தொடர்பாக அமைச்சர் மா.சு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்
முன்னாள் தமிழக முதல்வர் திமுக தலைவருமான கருணாநிதிக்குச் சென்னை மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் அறிவிக்கப்பட்டது இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் சட்டசபை விதி எண் 110இன் கீழ் வெளியிட்டார்.
காமராஜர் சாலையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

கருணாநிதி நினைவிடம்
கருணாநிதியின் சாதனைகளை, சிந்தனைகளைப் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே இந்த நினைவிடம் அமைக்கப்படும் என்றும் அதில் கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை அடங்கிய நவீன ஒளிப்படங்கள் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக வெளியான மாதிரி வரைபடத்தைப் பிரம்மாண்டமான பேனா வடிவிலான தூண் இடம்பெற்று இருந்தது.

நினைவுத்தின்னம்
இதற்கிடையே கருணாநிதி நினைவிடத்திற்கு அருகே உள்ள கடல் பகுதியில் சுமார் 42 மீ உயரத்தில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்க உள்ளதாகவும் இதற்குத் தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியானது. ரூ.81 கோடி செலவில் அமையும் இந்த நினைவுச் சின்னம் கடலில் 360 மீட்ட தொலைவுக்குப் பாலம் அமைக்கப்படும் எனக் கூறப்பட்டது. மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியானது.

விவாதம்
இது இணையத்தில் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தி இருந்தது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பின. சில அரசியல் தலைவர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், இது புதிய திட்டம் இல்லை என்றும் கருணாநிதிக்குக் கடலில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைப்பது ஏற்கனவே திட்டமிடப்பட்டதுதான் என்றும் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

அமைச்சர் மா.சு
இந்தச் சூழலில் இது தொடர்பாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் இப்போது கூறிய உள்ள தகவல்கள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இது குறித்து அவர் கூறுகையில், "தமிழகத்தில் (நேற்று) நடைபெற்ற 32ஆவது மெகா வேக்சின் முகாமில் ஒரே நாளில் 18.8 லட்சம் பேர் வேக்சின் போட்டுக் கொண்டு உள்ளனர். மாவட்ட அளவில் வேக்சின் போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

செஸ் ஒலிம்பியாட்
கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது என்று மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. அனைவரும் கொரோனா வேக்சின் போட வேண்டும். இன்னும் 65 நாட்கள் இலவசமாக பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ளலாம். மங்கி பாக்ஸை பொறுத்தவரைத் தமிழகத்தில் யாருக்கும் இதுவரை அந்த பாதிப்பு கண்டறியப்படவில்லை. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைத்து வீரர்களுக்கும் மங்கி பாக்ஸ் டெஸ்ட் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம்.
Recommended Video

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவுச் சின்னமாகக் கடலில் பேனா போன்ற அமைப்பை உருவாக்குவது தொடர்பாக இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அது வெறும் பத்திரிகைகளில் வந்த செய்தி மட்டுமே. மெரினாவில் இருந்து கடலுக்குள் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாகப் பேனா நினைவுச் சின்னத்தை அமைப்பது குறித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடவில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications