அவைத் தலைவர் பதவி பறிப்பா?.. ஜெயலலிதாவே வந்து மாற்றினால்தான் உண்டு.. மதுசூதனன்
சென்னை: அதிமுக அவைத் தலைவர் பதவியிலிருந்து என்னை யாரும் நீக்க முடியாது என மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
அதிமுக அண்மைக்காலமாக முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் அதிமுக செயற்குழு நடைபெற்றது. இதில் வரும் சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமியா அல்லது ஓ பன்னீர் செல்வமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதிமுகவில் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்ய வழிகாட்டும் குழு துவக்கப்படும் என்றும் அக்டோபர் 7-ஆம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

துணை முதல்வர் வீடு
இந்த நிலையில் இன்று முதல்வர் வீட்டிலும் துணை முதல்வர் வீட்டிலும் அமைச்சர்கள் மாறி மாறி ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதனிடையே அவைத் தலைவர் பதவியிலிருந்து மதுசூதனன் நீக்கப்படுவார் என ஒரு தகவல் வெளியானது. அதற்கு பதில் வேறு ஒருவரை நியமிக்க வாய்ப்பு என்றும் தகவல்கள் கூறின.

பதவி
இந்த நிலையில் இதுகுறித்து மதுசூதனனிடம் கேட்ட போது அதிமுக அவைத் தலைவர் பொறுப்பிலிருந்து என்னை யாராலும் நீக்க முடியாது. நான் கட்சியில் பணியாற்றியதை பார்த்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா எனக்கு கொடுத்த பதவி இது. நான் திடீர் என இந்த பதவிக்கு வந்துவிடவில்லை.

தகவல்கள்
எம்ஜிஆர் காலத்திலிருந்தே நான் கட்சி பணிகளில் இருந்து வருகிறேன். எனது திறமையை பார்த்து ஜெயலலிதா இந்த பதவியை கொடுத்தார். எனவே நான் இப்பதவிலிருந்து நீக்கப்படுவேன் என வரும் தகவல்கள் எல்லாம் பொய்யானது. என் உயிர் உள்ளவரை நான் இப்பதவியில்தான் நீடிப்பேன்.

மதுசூதனன் விளக்கம்
ஜெயலலிதாவே உயிரோடு வந்து எனது பதவியை பறித்தால்தான் உண்டு என மதுசூதனன் விளக்கியுள்ளார். நாளை முதல்வர் வேட்பாளர் அறிவிக்கும் நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸை மற்ற அமைச்சர்கள் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிகின்றன.












Click it and Unblock the Notifications