மாஜி அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி மீது கொலை முயற்சி புகார் - ஹைகோர்ட்டில் போலீஸ் ஷாக் தகவல்
சென்னை: அதிமுகவைச் சேர்ந்த தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது பண மோசடி புகார் மட்டுமின்றி கொலை முயற்சி புகாரும் நிலுவையில் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் கே.டி.ராஜேந்திரபாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விஜய் நல்லத்தம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகாரில் பதிவான வழக்கில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட நால்வரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த மனுவில் தங்களுக்கு எதிராக புகார் அளித்த நல்லத்தம்பி மீது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி தொடர்பாக பல புகார்கள் உள்ளன; தங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் அளிக்கப்பட்ட பொய் புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ளது என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

ராஜேந்திர பாலாஜி மீது கொலைச் சதி புகார்
இந்த மனுக்கள் நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜரானார். மேலும் வேலைக்காக பணம் வாங்கியது தவிர, கொலை சதித் திட்டத்திலும் ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்பு இருக்கிறது என்று நீதிமன்றத்தில் அசன் முகமது ஜின்னா தெரிவித்தார். அத்துடன் ராஜேந்திர பாலாஜி, 11 பேரிடம் மோசடி செய்திருக்கிறார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தது மட்டுமல்லாமல், ராஜவர்மன் என்பவரை கொலை செய்யவும் ராஜேந்திர பாலாஜி திட்டமிட்டார் என்றார் அசன் முகமது ஜின்னா.

முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு
இரு வழக்கிலும் ராஜேந்திர பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என புகார்தாரர்களான விஜயநல்லதம்பி மற்றும் ரவீந்திரன் தரப்பில் வாதிடப்பட்டது. ராஜேந்திர பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனுக்கள் தாக்கல் செய்ய இருப்பதாகவும் அவர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

பொய்யான புகார்...
ராஜேந்திர பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் ஆஜராகி புகார் அளித்த விஜய் நல்லத்தம்பியின் உண்மைத்தன்மையை ஆராய வேண்டும் என்றும், காவல்துறை உரிய நோட்டீஸ் வழங்காமல், கைது நடவடிக்கையில் ஈடுபடாமல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். அரசியல் உள்நோக்கத்துடன் புகார் அளிக்கப்பட்டு, வழக்கு பதிவுசெய்யப்பட்டதாகவும் அஜ்மல்கான் குறிப்பிட்டார். உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த விஜய நல்லதம்பியை அரசுத்தரப்பு பயன்படுத்தி வருவதாகவும், அவர் அனைத்து கட்சிகளிலும் அங்கம் வகித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

விசாரியுங்க..கைது கூடாது
இதையடுத்து, இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய நீதிபதி அனுமதித்தார். மேலும் புலன் விசாரணையை தொடரலாம் எனவும் உத்தரவிட்டார் நீதிபதி. அதேநேரத்தில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கைது போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்க கூடாது எனவும் உத்தரவிட்டு, முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை நவம்பர் 24ம் தேதிக்கு நீதிபதி நிர்மல் குமார் ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications