இஸ்லாமியர்களுக்கு எதிரானது ஆர்எஸ்எஸ் என்பதை பாடப்புத்தகத்தில் ஏன் நீக்க வேண்டும்? ஹைகோர்ட்
சென்னை: இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்து மகா சபா மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் எடுத்தது என பத்தாம் வகுப்பு பாடத்தில் குறிப்பிட்டுள்ள வரலாற்றை ஏன் நீக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் 'இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை 'இந்து மகா சபா மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் எடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாட புத்தகத்தில் இருந்து இந்த வாசகங்களை நீக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி சந்திர சேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த மாதம் தனி நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மேற்கொண்டு அச்சடிக்கப்படும் புத்தகங்களில் இந்த வாசகங்கள் நீக்கப்படும் எனவும் தற்போது அச்சடிக்கப்பட்டுள்ள புத்தகங்களில் இந்த வாசகங்கள் மறைக்கப்படும் என விளக்கமளித்த தமிழக அரசு, இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆனால் இந்த சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரியும் ஆர்.எஸ்.எஸ் குறித்த அந்த வரலாற்று வாசகங்களை பாட புத்தகத்தில் இருந்து நீக்க தடை கோரியும் தந்தை பெரியார் திராவிடர் கழக துணை தலைவர் துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.எஸ்.எஸ் இயக்க தலைவர்களான நாதுராம் கோட்சே, சாவர்க்கர், கோல்வார்கள் போன்றவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்கள் என்பது வரலாறு. ஆகையால் ஆர்.எஸ்.எஸ் குறித்து பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வாசகங்களை நீக்க கூடாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை கேட்ட நீதிபதிகள், ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு, தற்போது நம்முடன் நட்புறவு கொண்டுள்ள சீனா அன்று இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தது போன்ற வரலாற்றை எப்படி மறைக்க முடியாதோ, அதேபோல தான் இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை ஆர்.எஸ்.எஸ். எடுத்ததையும் மறைக்க முடியாது என கருத்து தெரிவித்தனர்.
மேலும், இது போன்ற வரலாறுகளை பாட புத்தகங்களில் இருந்து நீக்க என்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது என்பது தொடர்பாக மார்ச் 19-ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications