ரூ.100 கோடி சொத்துகளை மறைத்தாரா விஜய்? “முறைகேடு”- வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
சென்னை: தவெக தலைவர் விஜய் தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்துள்ளது குற்றம் தான் என்று தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் ரூ.115.13 கோடி சொத்து எனக் குறிப்பிட்டுள்ளார் விஜய். திருச்சி கிழக்கு தொகுதியில் ரூ.220.15 கோடி சொத்து உள்ளதாக விஜய் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

தமிழக சட்டமன்ற தேர்தலில், தவெக தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இரு தொகுதிகளிலும் விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்துக்கணக்கை மறைத்துள்ளதாகவும் கூறி, வியாசர்பாடியைச் சேர்ந்த பெரம்பூர் வாக்காளரான விக்னேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், விஜய் பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவில், தனது சொத்து மதிப்பு, 115 கோடியே 13 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் எனக் குறிப்பிட்டிருந்தார். அதேசமயம் திருச்சி கிழக்கு தொகுதிக்கான வேட்புமனுவில், 220 கோடியே 15 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் எனக் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூபாய் 100 கோடிக்கும் அதிகமான வித்தியாசம் பெரம்பூர் தொகுதியில் விஜய் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் வெளியிடப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது
திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் குறிப்பிட்ட சொத்து மதிப்பை விட, பெரம்பூரில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் குறைவாக காட்டியது உண்மைத் தகவலை மறைத்ததற்கு சமம் என்பதால், விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் தெரிவித்துள்ள சொத்து விவரங்கள் முழுமையானவையா? உண்மையானவையா என விசாரிக்க, வருமான வரித்துறைக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தவர், ஒரு தொகுதியில் 100 கோடி ரூபாய் வரை குறைத்து காட்டியது முறைகேடானது என நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்கும்படி வருமான வரித்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications