திமுக எம்.எல்.ஏ. எழிலனின் பொதுப் பட்டியலில் கல்வியை எதிர்த்து வழக்கு- மீண்டும் நாளை விசாரணை!
சென்னை: கல்வியை மாநிலங்களுக்கான பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மத்திய அரசு மாற்றியதை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. எழிலன் தொடர்ந்த வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1975 - 1977ல் நெருக்கடி நிலை அமலில் இருந்த போது, மாநில பட்டியலில் இருந்த கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றி கொண்டு வரப்பட்ட அரசியல் சாசனத்தின் 42வது திருத்தத்தை எதிர்த்து ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் எழிலனின் அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசியல் சாசன முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சுந்தர் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய முழு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
ஹேய்.. அதுக்குன்னு இப்படியா.. ஓடும் ரயிலில் பெண் செய்த காரியத்தை பாருங்க.. மிரண்டு போன பயணிகள்..!!
எழிலன் தரப்பு வாதம்
அப்போது, மனுதாரர் எழிலன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, மத்திய அரசு, நெருக்கடி நிலை காலகட்டத்தில் கொண்டு வந்த இந்த அரசியல் சாசன திருத்தம், மாநில அரசின் தன்னாட்சி அந்தஸ்தை பறிக்கும் வகையில் உள்ளதால், இது கூட்டாட்சி கொள்கையை பாதிக்கிறது என வாதிட்டார். கல்வியை பொது பட்டியலுக்கு மாற்றி அரசியல் சாசன திருத்தம் கொண்டு வரப்பட்டு, 46 ஆண்டுகளுக்கு பின் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது எனக் குறிப்பிட்டார். எந்த அரசியல் காரணங்களுக்காகவும் இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்றும், வழக்கு தொடர்ந்த அறக்கட்டளை அரசியல் சார்பற்றது எனவும் விளக்கினார்.
42-வது திருத்தம் எனும் விஷமரம்
வழக்கில் மேற்கோள்காட்டும், தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்ட சட்டங்களை எதிர்த்து இந்த வழக்கை தாக்கல் செய்யவில்லை எனவும், 42 வது அரசியல் சாசன திருத்தம் விஷமரம் போன்றது எனவும், அதை வேரோடு அகற்றவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார். நாட்டின் கூட்டாட்சி கொள்கை, மத்திய - மாநில அரசுகளின் அதிகாரங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புகளை மேற்கோள்காட்டி வாதிட்ட மூத்த வழக்கறிஞர் என் ஆர்.இளங்கோ, கூட்டாட்சி கொள்கைகளுக்கு விரோதமாக திருத்தங்கள் மேற்கொள்ள முடியாது எனவும், அரசியல் சாசன நிர்ணய சபையில் கல்வியை பொது பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும், மத்திய அரசு பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும், மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும் விவாதங்கள் நடந்தன எனவும் சுட்டிக்காட்டினார்.
கல்விக்கு செலவிடும் மாநில அரசுகள்
மத்திய அரசை விட, மாநில அரசுகளே எப்போதும் கல்விக்காக அதிகளவில் செலவு செய்து வருவதாகவும், மாநில அரசுகளால் மட்டுமே கல்வியை திறம்பட நிர்வகிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றுவதற்கு ஆதரவாக 20 மாநிலங்கள் கையெழுத்திட்டதாகவும், தமிழகம் மற்றும் மேகாலயாவில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமலில் இருந்ததால் கையெழுத்திடவில்லை என்றும் தெரிவித்தார்.
நாளையும் விசாரணை
எந்த காரணமும் இல்லாமல் நெருக்கடி நிலை காலத்தில் மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் வகையில் இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டதாக சுட்டிக்காட்டினார். கடந்த 1978ம் ஆண்டு ஆகஸ்டில் கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட போதும், ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படவில்லை எனத் தெரிவித்தார். இவ்வழக்கில் வாதங்கள் முடிவடையாததால் விசாரணை நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டது.