தென்னிந்திய திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் சங்க நியமனம்.. உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி
சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க கோரியும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சென்னை: ஒவ்வொரு சங்கங்களின் நிர்வாகிகளும், தங்கள் சொந்த நலனை கருதியே முடிவுகளை எடுக்கின்றனர் எனவும், உறுப்பினர்கள் நலனை கருத்தில் கொள்வதில்லை எனவும் சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தென்னிந்திய திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கத்தில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டது தொடர்பான வழக்கை விசாரித்த போது, உயர் நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.
தென்னிந்திய திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்தன. இந்த புகார்களின் அடிப்படையில், சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்து தமிழக அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இது ஒருபுறம் இருக்க, சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க கோரியும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், வழக்கு தொடர்ந்துள்ள நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் மோதலில் ஈடுபட்டுள்ளதாகவும், அதனால் உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு சங்க நிர்வாகிகளும், தங்கள் சொந்த நலன் கருதியே முடிவுகளை எடுப்பதாகவும், உறுப்பினர்கள் நலனை கருத்தில் கொள்வதில்லை என்றும் அதிருப்தி தெரிவித்தார்.
மேலும், சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்த அரசாணை காலாவதியாகிவிட்டதால், இரு வாரங்களில் புதிதாக சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, சங்கத்தின் கணக்குகளை முறைப்படுத்தி, உறுப்பினர் பட்டியலை தயாரித்து தேர்தல் நடத்த வேண்டும் எனவும் சிறப்பு அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications