அதிர்வலைகளை ஏற்படுத்திய டாக்டர் சுப்பையா கொலை.. வழக்கில் உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
சென்னை: டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை, வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதே சமயத்தில், இனி எக்காரணம் கொண்டும் விசாரணை ஒத்திவைக்கப்பட மாட்டாது எனக் கூறிய நீதிபதிகள், தொடர்ந்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டு கொண்டே இருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யார் பதில் சொல்வது என்றும் கேள்வியெழுப்பினர்.
நீதிபதிகளின் இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தையே உலுக்கிய டாக்டர் சுப்பையா கொலை வழக்கு இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக கருதப்படுகிறது.

கூலிப்படையை ஏவி கொலை
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்தவர் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா. கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், மருத்துவர் சுப்பையாவை கூலிப்படையினர் கொலை செய்தது தெரியவந்தது. மேலும், நிலப்பிரச்சினை காரணமாக இந்தக் கொலை நடைபெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மரண தண்டனை
இதுதொடர்பான வழக்கில், அரசுப் பள்ளி ஆசிரியர் பொன்னுசாமி, அவரின் மகன்கள் வழக்கறிஞர் பாசில், பொறியாளர் போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய ஏழு பேருக்கு மரண தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து, கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேல்முறையீடு
இதனிடையே, பொன்னுசாமி, பாசில், போரிஸ், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார் உள்ளிட்ட ஏழு பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்யக் கோரி விசாரணை நீதிமன்றமே, வழக்கு தொடர்பான விபரங்களை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தது. அதே சமயத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரும் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர். இரட்டை ஆயுள் தண்டனையை எதிர்த்து மேரி புஷ்பம், ஏசுராஜன் ஆகியோர் சார்பிலும் மேல் முறையீடு செய்யப்பட்டது.

நீதிபதிகள் அதிருப்தி - இறுதி விசாரணை
இந்த மனுக்கள், நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, வாதத்தை தொடங்க தயாராக இருப்பதாக கூறினார்.
தண்டிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும், பாட்னா உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியுமான அஞ்சனா பிரகாஷ், "இந்த வழக்கில் ஆஜராக தம்மை புதிதாக நியமித்துள்ளதால் வழக்கு விவரங்களை படிக்க அவகாசம் தேவை. எனவே விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நீதிபதிகள், "எத்தனை முறைதான் விசாரணையை ஒத்திவைப்பது?" என கேள்வியெழுப்பினர். "ஒவ்வொரு முறை வழக்கு விசாரணைக்கு வரும் போது டெல்லி, மும்பையில் இருந்து வழக்கறிஞர்கள் வருகிறார்கள், அதனால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் எனக் கேட்கிறீர்கள். இவ்வாறு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டால் பாதிக்கப்பட்டவருக்கு யார் பதில் சொல்வது?" என நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, வழக்கின் இறுதி விசாரணையை அக்டோபர் மாதம் 17-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், எந்தக் காரணத்தை கொண்டும் இனி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படமாக நீதிபதிகள் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications