ராஜேஷ் தாஸ் பங்களாவுக்கு நோ மின்சாரம்.. பீலா வெங்கடேஷுக்கு சென்னை ஐகோர்ட் பரபர உத்தரவு
சென்னை: பங்களாவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் பீலா வெங்கடேசன் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸும், பீலா வெங்கடேஷனும் தம்பதியர், செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் வாங்கிய பங்களா வீட்டில் வசித்து வந்தனர். தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால், பங்களாவுக்கு பீலா வெங்கடேஷ் காவலாளியை நியமித்துள்ளார்.

புகார்: கடந்த 18ம் தேதி தையூர் பங்களா வீட்டுக்கு வந்த ராஜேஷ் தாஸ், காவலாளியைத் தாக்கி வெளியேற்றியதாக, பீலா வெங்கடேசன், கேளம்பாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார்.
மேலும், தனது பெயரில் உள்ள பங்களாவின் மின் இணைப்பைத் துண்டிக்கும்படி, செங்கல்பட்டு மின்வாரிய பொறியாளருக்கு பீலா வெங்கடேசன் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், பங்களாவின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
வழக்கு: இதை எதிர்த்தும், மீண்டும் மின் இணைப்பு வழங்க உத்தரவிடக் கோரியும் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், விவகாரத்துத் தொடர்பான வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், எரிசக்தித் துறையின் முதன்மை செயலாளராக உள்ள பீலா வெங்கடேசன், தன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, அதிகாரிகளுக்குக் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
உத்தரவு: இந்த மனு, நீதிபதி பி.பி.பாலாஜி முன் விசாரணைக்கு வந்தபோது, ராஜேஷ் தாஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரகாஷ், பங்களாவுக்கான வீட்டுக் கடன் மற்றும் மின் கட்டணம் ஆகியவற்றை ராஜேஷ் தாஸ் தான் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து, மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் பீலா வெங்கடேசனுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை மே 29ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications