மோடி காலத்து குஜராத் மாதிரியே இருக்கு.. விஜய் அரசை ஒப்பிட்ட தொழிலதிபர்.. பரபரப்பு லிங்க்ட்இன் போஸ்ட்
திருச்சி: தமிழக முதல்வர் விஜய்யை பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த காலத்து நிர்வாக திறமையுடன் ஒப்பிட்டு பிரபல தொழிலதிபர் ஒருவர் போஸ்ட் செய்துள்ளார்.
திருச்சியில் உள்ள தங்களது மருத்துவமனைக்கு அரசு உரிமம் கோரி விண்ணப்பித்த போது, எவ்வித தாமதமும் லஞ்சமும் இன்றி மிகக் குறுகிய காலத்தில் அனுமதி வழங்கப்பட்டதாக பிரபல மருத்துவமனை நிர்வாகி மற்றும் தொழிலதிபர் ரமேஷ் பாலசுப்பிரமணியன் தனது லிங்க்டின் (LinkedIn) பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

தற்போதைய தமிழக முதல்வர் விஜய்யின் தலைமையிலான தமிழக அரசின் இந்த வேகமான செயல்பாட்டை, பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த காலத்து நிர்வாக திறமையுடன் ஒப்பிட்டு அவர் பாராட்டியுள்ளார்.
தொழிலதிபர் ரமேஷ் பாலசுப்பிரமணியன் தனது சமூக ஊடகப் பதிவில், தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கும் நிறுவனங்களை நடத்துவதற்கும் தேவையான அரசு அனுமதிகள் மற்றும் உரிமங்களைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள வியக்கத்தக்க மாற்றங்களை மிக விரிவாகப் பட்டியலிட்டுள்ளார். திருச்சியில் உள்ள தங்களது மருத்துவமனைக்காக ஒரு குறிப்பிட்ட அரசு உரிமத்திற்கு அவர்கள் விண்ணப்பித்திருந்ததாகவும், விண்ணப்பித்த வெறும் 48 மணி நேரத்திற்குள்ளாகவே அந்த உரிமத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசு அதிகாரிகளின் அதிரடி வேகம்
அதிகாரிகளின் வேகம் அத்துடன் நின்றுவிடவில்லை என்பதை சுட்டிக்காட்டிய அவர், "அன்று மாலையே எங்களை மீண்டும் தொடர்பு கொண்ட அரசு அதிகாரிகள், கோப்புகள் எதுவும் அலுவலகத்தில் தேங்கக் கூடாது என்றும், அது உள்நாட்டில் பல கேள்விகளை எழுப்பும் என்பதால் உரிமத்தை அன்றைய தினமே வந்து பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டனர்" என்று ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளார். இதில் ஏதேனும் சிக்கல் உள்ளதா என்று மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் கேட்டபோது, "உங்கள் விண்ணப்பம் முற்றிலும் விதிகளுக்கு உட்பட்டு சரியாக உள்ளது, பிறகு ஏன் நாங்கள் அதை நிறுத்தி வைக்க வேண்டும்?" என்று அந்த அதிகாரி மிக நேர்மையாகப் பதிலளித்துள்ளார்.
"எவ்வித தாமதமும் இல்லை; விடுபட்ட கோப்புகள் என்று எதுவும் இல்லை; 'நாளை வாருங்கள்' என்ற வழக்கமான தட்டிக்கழிப்புகள் இல்லை. எந்தவொரு 'சுக்ரானா' (நன்றி காணிக்கை) அல்லது 'சாய்-பானி' (லஞ்சம்) போன்ற மறைமுகக் கோரிக்கைகளோ அல்லது சைகைகளோ அங்கு இல்லை. அங்கு காணப்பட்டது வேகம், பொறுப்புணர்வு மற்றும் அசாத்திய நிர்வாகத் திறன் மட்டுமே" என ரமேஷ் பாலசுப்பிரமணியன் பாராட்டியுள்ளார்.
மோடியின் குஜராத் நிர்வாகத்துடன் ஒப்பீடு
ஒரு தொழிலை வெற்றிகரமாக நடத்துவதற்கும், அரசாங்கத்தின் ஒழுங்குமுறை அனுமதிகளைப் பெறுவதற்கும் எவ்வளவு பெரிய போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தற்போதைய இந்த மாற்றம் எவ்வளவு அசாதாரணமானது என்பது புரியும் என்று அவர் கூறியுள்ளார். மேலும், இந்த அனுபவம் தனக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு நரேந்திர மோடி அவர்கள் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தை நினைவூட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்போதைய குஜராத் அரசு, தொழில்களைத் தடுக்கும் ஒரு நுழைவாயில் காவலராக (Gatekeeper) இல்லாமல், தொழில்களை ஊக்குவிக்கும் ஒரு மிகச்சிறந்த ஊக்கியாக (Enabler) செயல்பட்டதை ரமேஷ் பாலசுப்பிரமணியன் நினைவு கூர்ந்துள்ளார். தற்போது தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசும் அதே போன்றதொரு பொற்காலப் பக்கத்தை எழுதத் தொடங்கியுள்ளதாக அவர் தனது பதிவில் வெளிப்படையாக ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.
கடைசி மைல் நிர்வாகம்
"நிர்வாகம் என்பது வெறும் மேடைப் பேச்சுகளில் மட்டும் இல்லை. அது கடைசி மைலில் உள்ள சாதாரண குடிமகனை எப்படிச் சென்றடைகிறது என்பதில் தான் உள்ளது. எவ்வித உராய்வும் தடையுமின்றி ஒரு கோப்பு நகரும் போது, ஒரு குடிமகனுக்குத் தனது காரியத்தை சாதிக்க எந்தவொரு செல்வாக்கும் தேவைப்படாத போது, ஒரு தொழிலதிபர் தேவையற்ற காகிதப் பணிகளில் நேரத்தை வீணடிக்காமல் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மட்டும் கவனம் செலுத்த முடிகிற போது தான் உண்மையான நல்லாட்சி மலர்கிறது" என்று அவர் விளக்கியுள்ளார்.
'தவறுகள் நடக்கும் போது விமர்சனம், தகுதியிருக்கும் போது பாராட்டு' என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில், சிறப்பாகச் செயல்படும் தமிழக அரசின் இந்த மாற்றத்திற்குத் தனது மனமார்ந்த பாராட்டுகளை அவர் தெரிவித்துள்ளார்.
நன்றாகத் தொடங்கப்பட்ட ஒரு பணி, பாதி முடிந்ததற்குச் சமம்" என்ற பழமொழியோடு தற்போதைய தமிழக அரசின் நிர்வாகச் சீர்திருத்தங்கள் எதிர்காலத்தில் இன்னும் பெரிய சாதனைகளைப் படைக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர் தனது பதிவை நிறைவு செய்துள்ளார். இந்த நேர்மறையான பதிவு தற்போது ஒட்டுமொத்த தொழில்துறை மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications