கோவை அருகே ரயில் மோதி யானை பலி.. ரயில்வே பொதுமேலாளர் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: கோவை அருகே கஞ்சிக்கோடு - வாளையாறு வழித்தடத்தில் ரயில் மோதி பெண் யானை பலியானது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, தெற்கு ரயில்வே பாலக்காடு மண்டல பொது மேலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் மதுக்கரை முதல் கேரள எல்லையில் உள்ள வாளையாறு வரை சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு வனப்பகுதி வழியாக ரயில் பாதை உள்ளது. இந்த வழியாகவே நாள்தோறும் பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இதனிடையே, வனப் பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டு யானைகள் தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி பலியாகும் சம்பவங்கள் தொடர்ந்ததால், தமிழக வனத்துறை மற்றும் ரயில்வே துறை சார்பில் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்கும் விதமாக ரயில் பாதையில் கண்காணிப்பு கேமராக்கள், ஒலி எழுப்பி கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளது.

பலியான பெண் யானை..
இந்நிலையில், கேரள மாநிலம் கஞ்சிக்கோடு - வாளையாறு இடையே உள்ள கொட்டாம்பட்டி என்ற இடத்தில் கடந்த 14-ம் தேதி அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த 15-க்கும் மேற்பட்ட யானைகள் தண்டவாளத்தை கடக்க முயன்றன. அப்போது, கன்னியாகுமரியில் இருந்து அசாம் நோக்கி சென்ற விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு பெண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. ஒரு குட்டி யானை காயமடைந்தது. ஆனால் அது எங்கே சென்றது எனத் தெரியவில்லை.

நேரில் ஆஜராக உத்தரவு
இந்த சூழலில், யானைகள் பாதுகாப்பது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள், "கடந்த கஞ்சிக்கோடு - வாளையாறு இடையே ரயிலில் அடிபட்டு பெண் யானை உயிரிழந்திருக்கிறது. இதுசம்பந்தமாக தெற்கு ரயில்வே பாலக்காடு மண்டல பொது மேலாளர் நவம்பர் 24-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.

ரயில்களின் வேகத்தை குறைக்க ஆய்வு
மேலும், யானைகள் வழித்தடத்தின் வழியாக செல்லும் ரயில்களின் வேகத்தை குறைக்க உத்தரவிட்டும், அதற்கு சாத்தியமில்லை என பாலக்காடு மண்டல பொறியாளர் அளித்த அறிக்கை என்பது எந்தவிதமான அறிவியல் ஆய்வு அடிப்படையானது அல்ல எனத் தெரிவித்த நீதிபதிகள், யானைகள் வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தைக் குறைத்து விபத்துக்களை தடுப்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கும்படியும், இக்குழு ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 24-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

அலாரங்களை அகற்ற உத்தரவு
மற்றொரு வழக்கில், யானைகள் வழித்தடத்தில் உள்ள சாலையில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அலாரங்கள் 24 மணி நேரமும் எச்சரிக்கை வாசகங்களை ஒலிபரப்பிக் கொண்டிருக்கும் போது, யானைகளால் கடந்து செல்ல முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த அலாரங்களை அகற்றி விட்டு வேகத்தடைகளை அமைக்க உத்தரவிட்டுள்ளனர். அதேபோல, கோவை மாவட்டம் பேரூர் பகுதியில் யானைகள் வழித்தடங்களில் அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகளை மூட உத்தரவிட்ட நீதிபதிகள், அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தினர்.












Click it and Unblock the Notifications