"நிம்மதி.." சீமானுக்கு எதிரான வழக்கு.. இடைக்கால தடை விதித்த சென்னை நீதிமன்றம்! ஆஜராகவும் விலக்கு
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், கூட்டங்களில் ஆவேசமாகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இதற்காக அவர் பல்வேறு வழக்குகளையும் எதிர்கொண்டு வருகிறார்.

அப்படித்தான் சென்னை தரமணியில் கடந்த 2018ஆம் ஆண்டில் தமிழர் எழுச்சி கட்சி சார்பில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய பேச்சுக்கள் சர்ச்சையானது.
வழக்கு: அந்தக் கூட்டத்தில் அவர் தமிழீழம் பற்றியும், மணிப்பூர், நாகாலாந்து மாநிலங்களில் நிலவும் சூழல் குறித்தும், நியூட்டீனோ திட்டம், சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் ஆகியவை குறித்துப் பேசியிருந்தார். சீமானின் இந்த பேச்சுகளும் அப்போது இணையத்தில் டிரெண்டிங் ஆனது.
இதையடுத்து, அப்போதே இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாகப் பேசியதாக தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில் போலீசார் குற்றப்பத்திரிகையை சைதாப்பேட்டை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி சீமான் மனுத் தாக்கல் செய்த நிலையில், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தள்ளுபடி: இருப்பினும், இதை எதிர்த்து சீமான் தாக்கல் செய்த வழக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அப்போது சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், விசாரணைக்கு நேரில் ஆஜராகச் சீமானுக்கு விலக்கு அளித்தும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications