குண்டர் சட்ட ரத்து உத்தரவு வாபஸ்.. ரௌடி சீர்காழி சத்யாவை உடனே கைது செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு!
சென்னை: ரௌடி சீர்காழி சத்யா மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்த உத்தரவை திரும்பப் பெற்றது சென்னை உயர் நீதிமன்றம். ரௌடி சீர்காழி சத்யாவை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி சத்யா என்ற சீர்காழி சத்யா (41). இவர் மீது கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

காவல் துறையினரால் தேடப்படும் குற்றவாளியான சீர்காழி சத்யா, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் பாஜக நிர்வாகி அலெக்சிஸ் சுதாகர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள வந்தபோது கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.
வட நெம்மேலி செக் போஸ்ட்டில் உதவி ஆய்வாளர் ரஞ்சித் குமார் தலைமையிலான போலீசார் சத்யாவின் காரை மடக்கி சோதனையிட்டனர். அப்போது, சத்யா மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர். பின்னர் மேலும் சிலரை பிடிக்க சென்றபோது, போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றார் ரௌடி சீர்காழி சத்யா. இதனால் போலீசார் சத்யாவை துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தனர்.
அதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நீதிமன்ற காவலில் இருந்த நிலையில் ரௌடி சத்யா மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சீர்காழி ரவுடி சத்யா மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
அதைத்தொடர்ந்து, பல்வேறு நிபந்தனைகளுடன் சத்யா மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்திருந்தது சென்னை உயர்நீதிமன்றம். இந்நிலையில், ரௌடி சீர்காழி சத்யா மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்த உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
மேலும், ரௌடி சீர்காழி சத்யாவை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கவும் காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications