"அது இந்து கடவுளே இல்லை, புத்தர் சிலை! இனி பூஜைகள் கூடாது.." சேலம் கோயில் வழக்கில் சென்னை ஐகோர்ட்
சென்னை: சேலம் மாவட்டத்தில் உள்ள கோயில் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
சேலம் மாவட்டம் பெரியேரி கிராமத்தின் கோட்டை ரோடு பகுதியில் கோயில் ஒன்று உள்ளது. இங்குள்ள சிலையைத் தலைவெட்டி முனியப்பன் என்று பக்தர்கள் வணங்கி வருகின்றனர்.
இதற்கிடையே கடந்த 2017ஆம் ஆண்டு சேலம் மவுத்த டிரஸ்ட் ஒன்று வழக்கு தொடர்ந்து இருந்தது. அதாவது அந்த கோயிலில் இருப்பது இந்து சிலை இல்லை புத்தர் சிலை என்று கூறி வழக்கு தொடரப்பட்டது.
ஸ்ரீரங்கம் கோவில் எதிரே 'கடவுள் இல்லைனு’ சொன்னவர் சிலை! அதை உடைக்கனும்! தனலை கிளப்பிய கனல் கண்ணன்..!
வழக்கு
அந்த மவுத்த டிரஸ்ட் தொடர்ந்து இருந்த வழக்கில், சேலம் மாவட்டம் பெரியேரி கிராமத்தில் கோட்டை சாலையில் உள்ள கோவிலில் இருப்பது புத்தர் சிலை. பல ஆண்டுகளாக இந்த சிலையைப் புத்த மதத்தினர் வழிப்பட்டு வந்தனர். ஆனால், காலப் போக்கில் இந்த புத்தர் சிலை இந்து தெய்வங்களில் ஒன்றாக மாற்றப்பட்டு இந்துக்களால் வணங்கப்படுகிறது" என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
ஆய்வு
முன்னதாக இந்த வழக்கு விசாரணையில், கோயிலில் இருக்கும் சிலையை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தமிழ் வளர்ச்சி ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொல்லியல் துறையினர் கோயில் சிலையை ஆய்வு செய்தனர். சிலையில் இருந்த அலங்காரங்களை நீக்கிய பின்னர் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தினர்.
புத்தர்
சிலை ஒரு தாமரை பீடத்தில் அர்த்தபத்மாசனம் என அழைக்கப்படும் அமர்ந்த நிலையில் இருந்தது. கைகள் தியான முத்திரை இருந்தது. மேலும், சிலையின் தலை புத்தரின் சுருள் முடி, உஷ்னிசா மற்றும் நீளமான காதுமடல் போன்றே இருந்தது. அந்த சிலை புத்தரின் பல பண்புகளைக் கொண்டு இருந்ததாகக் கூறி தொல்லியல் துறையினர் தங்கள் அறிக்கையை சமர்ப்பித்தனர். இதன் அடிப்படையிலேயே நீதிபதி தீர்ப்பை வழங்கி உள்ளார்.
தீர்ப்பு
இந்த வழக்கில் நீதிபதி அளித்த தீர்ப்பில், "தொல்லியல் துறை சிற்பத்தையும் வரலாற்றுச் சான்றுகளையும் கவனமாக ஆய்வு செய்த பின்னர், சிற்பம் புத்தரின் பண்புகளைக் கொண்டு இருப்பதாகக் கூறி உள்ளது. எனவே, அது இந்து கடவுள் இல்லை புத்தரின் சிலை என்று தொல்லியல் துறையினர் தெரிவித்து உள்ளனர். எனவே, இனி அந்த கோயிலைத் தலைவெட்டி முனியப்பன் கோயிலாக அறநிலையத்துறையினர் கருத முடியாது.
பூஜைகள் கூடாது
அந்த கோயிலை இனி அறநிலையத் துறையினர் நிர்வகிப்பதை அனுமதிக்க முடியாது. வேறு அமைப்புகளின் கட்டுப்பாட்டில் அந்த கோயிலை ஒப்படைக்க வேண்டும்" என்று கூறப்பட்டு உள்ளது. மேலும், சிலையை அசல் வடிவத்திற்கு மாற்றவும், அது புத்தர் சிலை என்று பலகை வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் அந்த கோயிலுக்கு எப்போதும் போலச் செல்லலாம். அதேநேரம் புத்தர் சிலைக்குப் பூஜைகள் உள்ளிட்ட சடங்குகள் செய்யப்படுவதில்லை என்பதும் உறுதிப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.