அப்பாடா.. ஒரு வழியாக மதுரை எய்ம்ஸ் பற்றி ஒரு சூப்பர் அப்டேட்.. அமைச்சர் அளித்த விளக்கம்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் பற்றி மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலப்பிரச்சினை எதுவும் இல்லை என்றும், நிதிப் பிரச்சினை மட்டும் தான் இருக்கிறது எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதேபோல் 2024 இறுதியில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கப்பட்டு, 2028ம் ஆண்டு இறுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிவடையும் என்றும் தெரிவித்துள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதன்பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டுமான பணிகள் இதுநாள் வரை தொடங்கப்படவில்லை.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும், மத்திய பட்ஜெட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுப்பான பணிக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியல் விவாதமாக மாறியுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015 -16 நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு அறிவித்தது. அதன்பின்னர் 2018ல் அமைச்சரவை கூட்டத்தில், மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் 750- படுக்கை வசதிகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்பின், 2019ல் பிரதமர் மோடி எய்ம்ஸ் கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.

நிலப் பிரச்சினையில்லை
அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு, 199.88 ஏக்கர் நிலத்தை மாவட்ட ஆட்சியர் மூலம் பயன்படுத்திக் கொள்ள கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் கூடுதலாக 22 ஏக்கர் நிலம் கோரினார்கள். அதன்பின்னர் 22.49 ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டது. இதனால் நிலம் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டது என்று கூறுவது ஏற்கத்தக்கதல்ல. 222.47 ஏக்கம் நிலம் உடனடியாக மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுவிட்டது. அதனை சுற்றுச்சுவர் எழுப்பி பாதுகாத்து வைத்துள்ளார்கள்.

நிதி பிரச்சினை
அதனால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலப் பிரச்சினை எல்லாம் இல்லை. நிதிப் பிரச்சினை மட்டுமே இருக்கிறது. எனவே, நிலப் பிரச்சினை போன்ற பூதாகர தோற்றத்தை தொடர்ச்சியாக யார் சொன்னாலும் அது தவறு. திமுக ஆட்சியமைத்த பின், எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து கட்ட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. அதேபோல் நானும் ஒவ்வொரு முறையும் மத்திய அமைச்சரை சந்தித்த போது எய்ம்ஸ் பற்றி கோரிக்கை வைத்தோம். கோவையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரிக்கை வைத்துள்ளோம். அதுமட்டுமல்லாமல் ராய்ப்பூர், அசாம் உள்ளிட்ட பகுதிகளிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

மத்திய அரசு நிதி
அதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தவிர்த்து, மற்ற மாநிலங்கள் அமைய உள்ள மருத்துவமனைகளுக்கு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ராய்ப்பூர் மருத்துவமனை பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் இதுவரை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதியை விரைந்து கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.

2028ல் முடிவு
தொடர்ந்து, டெண்டர் ஏஜென்சி இறுதி நடவடிக்கைகள், வரைபடப் பணிகள் முடிவடைந்து, 2024ம் ஆண்டு இறுதியில் தான் எய்ம்ஸ் மருத்துவமனைகள் பணிகள் தொடங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் 2028ம் ஆண்டு அனைத்து பணிகள் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications