கோவிட் காப்பீடு ரூ.50 லட்சம்.. நேற்று கடிதம் எழுதினேன்.. இன்று நல்ல செய்தி வந்துள்ளது -சு.வெங்கடேசன்
சென்னை: கோவிட் முன் களப் பணியாளர்களுக்கான ரூ.50 லட்சம் காப்பீடு புதுபிப்பது தொடர்பாக நேற்று தாம் எழுதிய கடிதத்துக்கு இன்று நல்ல செய்தி கிடைத்துள்ளதாக மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
அதன் விவரம் பின்வருமாறு;
''நேற்று கோவிட் முன் களப் பணியாளர்களுக்கான ரூ.50 லட்சம் காப்பீடு புதுப்பிக்கப்படாமல் இருப்பதை வேதனையோடு பகிர்ந்து உடனடியாக
அத்திட்டம் நீட்டிக்கப்பட ஆவன செய்யுமாறு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். ''
''இன்று நல்ல செய்தி கிடைத்துள்ளது. கோவிட் கள முன்வரிசைப் பணியாளர்க்கான காப்பீடு திட்டம் உடனடியாக அமலுக்கு வருகிற வகையில் புதுப்பிக்கப்படுவதாக செய்தி வந்துள்ளது. அமைச்சருக்கு நன்றி.''
இப்படி பன்றீங்களேமா.. 44 லட்சம் தடுப்பூசிகளை வீணாக்கிய மாநிலங்கள்..தமிழ்நாடு என்ன செய்தது தெரியுமா?
''ஆனால் இரண்டு கேள்விகள் எஞ்சி நிற்கின்றன. ஒன்று, இதற்கான பாலிசி 24.03.2021 அன்று முடிவடைந்து விட்டது. அன்றைய தினம் நள்ளிரவு வரை உயிரிழந்தவர்களுக்கான காப்பீட்டிற்கான விண்ணப்பம், ஆவணங்கள் 24.04.2021 க்குள்ளாக வரப் பெற்று உரிமப் பட்டுவாடா செய்யப்படும். இதுவே மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை செயலாளர் இராஜேஷ் பூசன் அவர்களின் 24.03.2021 கடிதம் தெரிவிப்பது. ஆனால் அமைச்சகத்தின் ட்விட்டர் செய்தி 24.04.2021 வரையில் இத் திட்டத்தின் கீழ் நீட்டிக்கப்பட்டிருப்பது போன்ற பொருள் தருகிறது. ஆனால் அதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளதா? இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இசைவு பெறப்பட்டுள்ளதா? என்பதை அரசு தெளிவு படுத்த வேண்டும்.''
''ஒரு முன் களப் பணியாளர்க்கு கூட காப்பீடு பயன் கிடைக்காமல் போய் விடக் கூடாது. அரசு அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டுமெனக் கோரி இன்று மீண்டும் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஒரு வேளை காப்பீட்டுத் திட்டத்தில் அவர்களுக்கான உரிமம் கிடைக்காவிடில் பி.எம் கேர் நிதி உடனடியாகப் பயன்படுத்த வேண்டும். கோவிட் போராளிகளின் குடும்பம் பரிதவிக்கிற நிலைமை வரக் கூடாது.''
''சுகாதாரப் பணியாளர்கள் மட்டுமின்றி கோவிட் எதிர்ப்பு களத்தில் அரும் பணி ஆற்றுபவர்கள் எல்லோரும் காப்பீட்டுப் பயன் பெறுகிற வகையில் புதுப்பிக்கப்படுகிற திட்டம் இருக்க வேண்டும். அமைச்சரின் பதிலை எதிர்பார்க்கிறேன்.''