ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே! ஒன்னு தளபதி.. இன்னொன்னு சரவணன்! மதுரை வடக்கு யாருக்கு?
சென்னை: மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதி இந்த சட்டசபைத் தேர்தலில் கடும் போட்டி நிலவக்கூடிய முக்கியமான தொகுதியாக பார்க்கப்படுகிறது. இந்த முறை களமிறங்கியுள்ள வேட்பாளர்களின் பின்னணி காரணமாக, இந்த தொகுதியில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பது குறித்து பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. பலமுனைப் போட்டி இருந்தாலும், திமுகவின் தளபதி - அதிமுகவின் சரவணன் இடையே தான் போட்டியே உள்ளது.
மதுரை வடக்கு தொகுதி 2011 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது உருவாக்கப்பட்டது. இந்த தொகுதி உருவான பிறகு நடைபெற்ற முதல் இரண்டு தேர்தல்களான 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் அதிமுக வெற்றி பெற்றது. அப்போது எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது.

ஆனால் 2021 தேர்தலில் அரசியல் சூழல் மாறியது. அந்த தேர்தலில் திமுக நேரடியாக போட்டியிட்டு, அதன் மாநகரச் செயலாளரான கோ. தளபதி வெற்றி பெற்று இந்த தொகுதியை கைப்பற்றினார்.
2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பி. சரவணன் குறிப்பிடத்தக்க வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
2026 சட்டசபை தேர்தல்
அப்போது அவர் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்புவரை திமுகவில் இருந்தவர் என்பதும், திடீரென கட்சி மாறி போட்டியிட்டதும் தேர்தல் களத்தில் முக்கிய காரணமாக இருந்தது. ஆனால், வியூகம் வகுக்க நேரம் இல்லாமல் போட்டியிட்டிருந்தாலும், திமுக வேட்பாளருக்கு கடும் போட்டி கொடுத்தது அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இந்த முறை நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. பி. சரவணன் கடந்த சில ஆண்டுகளாகவே மதுரை வடக்கு தொகுதியை குறிவைத்து திட்டமிட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தார்.
டாக்டர் சரவணன்
அதிமுக தலைமையிடம் வலியுறுத்தி இந்த தொகுதியில் சீட் பெற்ற அவர், இந்த முறை வெற்றியை இலக்காக வைத்து பல்வேறு வியூகங்களுடன் களத்தில் இறங்கியுள்ளார். தனது மருத்துவ சேவைகள் மற்றும் அறக்கட்டளை மூலம் மக்களிடம் தொடர்பை வலுப்படுத்தியிருப்பதும், அவருக்கு ஒரு ஆதரவுத் தளத்தை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கோ. தளபதி
மற்றொரு புறம், தற்போதைய எம்எல்ஏவான கோ. தளபதி இந்த முறை மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாய சூழலில் உள்ளார். அவர் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றால்தான் தனது கட்சிப் பதவியையும் அரசியல் செல்வாக்கையும் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே தனது பகுதிச் செயலாளர்கள் மற்றும் வட்டச் செயலாளர்களை செயல்படச் செய்து, தேர்தல் பணிகளை ஆரம்பித்தார்.
கல்லாணை
மேலும், திமுக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் கட்சியின் பலத்தை எடுத்துக்கூறி அவர் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். இந்த தொகுதியில் இந்த முறை புது முகங்களும் களமிறங்கியுள்ளனர். குறிப்பாக தமிழக வெற்றி கழகம் சார்பில் கல்லாணை என்ற வேட்பாளர் போட்டியிடுகிறார். அதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பில் திருநாவுக்கரசு உள்ளிட்ட வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதனால், இந்த தொகுதியில் நான்கு முனைப் போட்டி நிலை உருவாகியுள்ளது.
இளைஞர் வாக்குகள்
இந்த தொகுதியில் இளைஞர் வாக்காளர்கள் கணிசமான அளவில் இருப்பதும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. சுமார் 35 ஆயிரம் வாக்காளர்கள் 30 வயதிற்குட்பட்டவர்களாக இருப்பதால், இளைஞர்களின் வாக்குகள் தேர்தல் முடிவில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
மதுரை வடக்கு தொகுதி
அதனால் தான், மதுரை வடக்கு தொகுதி இந்த முறை மிகவும் கடுமையான போட்டிக்கு மாறியுள்ளது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு முக்கிய கட்சிகளுக்கிடையிலான நேரடி போட்டி மட்டுமே என்றும் சொல்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். தவெகவின் வேட்பாளர் கல்லாணை மதுரையில் தெரிந்த வேட்பாளர் என்றாலும் அதிமுக திமுக இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. தளபதி அல்லது சரவணனுக்கு தான் மதுரை வடக்கு தொகுதியில் வெற்றி. ஆனால், அது யார் என்பது தேர்தல் முடிவுகளின் போது தான் தெரியும் என்கின்றனர் அந்த அளவுக்கு கடும் போட்டி இருக்கிறது என்று கூறுகின்றனர் மதுரை மக்கள்.














Click it and Unblock the Notifications