மகாகவி பாரதியாரின் 139வது பிறந்ததினம்: அமைச்சர்கள் மரியாதை #HBDBharathiyar
மகாகவி பாரதியாரின் 139ஆவது பிறந்த தினத்தையொட்டி, தமிழக அமைச்சர்களும், பல்வேறு தரப்பினரும் பாரதியாரின் திரு உருவ சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
சென்னை: மகாகவி பாரதியாரின் 139ஆவது பிறந்த தினத்தையொட்டி, தமிழக அமைச்சர்களும், பல்வேறு தரப்பினரும் பாரதியாரின் திரு உருவ சிலைக்கு மரியாதை செலுத்தினர். மகாகவி பாரதியாரின் 139வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல் ஹாசன் உள்ளிட்டோர் பாரதிக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.
சாதிகள் இல்லையடி பாப்பா என்று நமது பள்ளி பருவத்திலேயே சாதி மறுப்பை ஊட்டிய மகா கவிஞனை நினைவு கொள்ள கடமைபட்டிருகிறோம். இந்திய சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்தது. நாளிதழ்கள் மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார் பாரதியார்.
பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட ஆங்கிலேயே அரசாங்கம் நாளிதழ்களை தடை செய்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது. விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி தேசிய கவியாக அனைவராலும் போற்றப்பட்டார். இவர் சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக, நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றினார்.
ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிபடுத்தியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார். செய்தியாளர்களாகிய வீரம் மிக்க மகாகவிஞரை அவரது பிறந்தநாளில் நாம் நினைவு கூர்வோம்
சென்னை மெரினா கடற்கரையில் காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டு உள்ள மகாகவி பாரதியின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதே போல மகாகவி பாரதியாரின் 139வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல் ஹாசன் உள்ளிட்டோர் பாரதிக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில், 'செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே - என்று தமிழ்நாட்டு உணர்ச்சியைத் தட்டி எழுப்பிய எழுச்சிக் கவிஞர் பாரதியார் பிறந்த தினம் இன்று! அவர் பிறந்த எட்டயபுரம் இல்லத்தை அரசு இல்லமாக்கி, தலைநகர் சென்னையில் அவருக்குச் சிலை வைத்து பெருமைப்படுத்தியது தி.மு.கழக அரசு! இன்றைய நாட்டு நிலைமையை நினைக்கும் போது 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம், என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்' என்ற பாரதியின் வரிகளே நினைவுக்கு வருகின்றன! வாழ்க பாரதி புகழ்! பெறுக அவர் சொன்ன உயர்வு!, எனத் தெரிவித்துள்ளார்.
அதே போல், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியில், 'ஊருக்கு நல்லது சொல்வேன்; எனக்குண்மை தெரிந்தது சொல்வேன் என்று முழங்கிய பாரதி, வாழ்நாளெல்லாம் நெஞ்சில் உரத்தோடும் நேர்மைத் திறத்தோடும் உண்மையைப் பாடினான். என் நெஞ்சில் நின்று வழிகாட்டும் அந்த முன்னோனுக்கு என் முதல் வணக்கம்,' எனத் தெரிவித்துள்ளார்.