3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு! தீவிரவாத தடுப்பு பிரிவு DIGயாக மகேஷ் நியமனம்! அமுதா ஆர்டர்
சென்னை: தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு டிஐஜியாக மகேஷ் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் கீழ் பணியாற்றி வரும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்தவகையில், இன்று மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை தமிழக அரசின் முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் பிறப்பித்துள்ளார்.

மாநில உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டிஐஜியான மகேஷுக்கு கூடுதல் பொறுப்பாக தீவிரவாத தடுப்பு பிரிவு டிஐஜி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை சிறப்பு பிரிவு எஸ்பி அருளரசுக்கு கூடுதல் பொறுப்பாக தீவிரவாத தடுப்பு பிரிவு தலைமை அலுவலக எஸ்.பி பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
தீவிரவாத தடுப்பு பிரிவு கோவை எஸ்.பியாக கடந்த மாதம் நியமிக்கப்பட்ட சசிமோகனுக்கு மதுரை தீவிரவாத தடுப்பு பிரிவின் எஸ்.பியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தீவிரவாத சதிச் செயல்: கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கோவை உக்கடம் அருகேயுள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். உயிரிழந்த முபினின் வீட்டிலிருந்து நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான வேதிப் பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இந்த கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) இந்த கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த தீவிரவாத சதிச்செயல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் 'தீவிரவாத தடுப்புப் பிரிவு' அமைக்கப்படும் என்று அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின். அதைத்தொடர்ந்து, 2023 ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில், 57.51 கோடி செலவில் தமிழக காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவில் 'தீவிரவாத தடுப்புப் பிரிவு' அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
தீவிரவாத தடுப்புப் பிரிவு: தொடர்ந்து, தீவிரவாத தடுப்புப் பிரிவுக்கு 383 பணியாளர்களை சேர்க்கவும், 89 புதிய வாகனங்களை ஒதுக்கவும் உத்தரவிடப்பட்டது. பணியாளர்களுக்கான ஊதியம், நிர்வாகச் செலவுகள், கட்டணங்கள், வாடகை என ரூ.57 கோடி ரூபாய் மற்றும் திரும்பப் பெறப்படாத செலவினமாக தளவாடச் செலவுகளுக்காக ரூ.26 கோடியையும் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
மேலும், புதிதாக தொடங்கப்படும் இந்த தீவிரவாத தடுப்புப் பிரிவு, தமிழக காவல்துறை நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபி மேற்பார்வையின் கீழ், டிஐஜி தலைமையில் செயல்படும் என்றும், இதில் 4 எஸ்.பிக்கள், 5 ஏஎஸ்பிக்கள், 13 டிஎஸ்பிக்கள், 31 காவல் ஆய்வாளர்கள், 61 உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என 383 பேர் இந்த பிரிவில் இடம்பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
ATS அதிகாரிகள் நியமனம்: இந்த பிரிவு, தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியிலும் நிகழும் குற்றங்களுக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்துடன் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக, சென்னை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய 4 இடங்களில் முதல் கட்டமாக தீவிரவாத தடுப்பு பிரிவு தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் சென்னை, கோவைக்கு, தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு புதிதாக எஸ்.பிக்கள் நியமனம் செய்யப்பட்டனர். புக்யா சினேகா பிரியா சென்னை தீவிரவாத தடுப்பு பிரிவு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பியாக சசிமோகன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தான், தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு டிஐஜி ஆக மகேஷ் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications