சென்னை டூ தூத்துக்குடி விமானத்தில் எந்திர கோளாறு.. ஓடுபாதையிலேயே நின்றது! பெரும் விபத்து தவிர்ப்பு
சென்னை: சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது எந்திர கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்ததால், உடனடியாக அவர் விமானத்தை ஓடுபாதையிலேயே நிறுத்தினார். சரியான நேரத்தில் எந்திர கோளாறை கண்டறிந்து விமானி விமானத்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் 70 பயணிகள் மற்றும் விமானி, ஊழியர்கள் 5 பேர் என மொத்தம் 75 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இன்று பிற்பகல் செல்ல இருந்த விமானத்தில் எந்திரக் கோளாறு ஏற்பட்டதால் இந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதேபோன்று தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு இன்று மாலை 5.45 மணிக்கு வர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவையும் ரத்து செய்யப்பட்டது.

திடீரென நிறுத்தப்பட்ட விமானம்
சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தென் மாவட்டங்களான மதுரை மற்றும் தூத்துக்குடிக்கும் விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு பிற்பகல் 2.15 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஓடுபாதையில் புறப்பட தயாராக இருந்தது.
இந்த விமானத்தில் 70 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 5 பேர் என மொத்தம் 75 பேர் இருந்தனர். விமானம் பிற்பகல் 2.15 மணிக்கு புறப்பட்டு ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை விமானி அறிந்தார். விமானத்தின் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் உடனே சுதாரித்துக்கொண்ட விமானி, ஓடுபாதையிலேயே விமானத்தை நிறுத்தினார்.
2 விமான சேவையும் ரத்து
பின்னர் உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு இது பற்றிய தகவலை கூறினார். இதையடுத்து அங்கு வந்த விமான என்ஜினீயர்கள் குழுவினர் விமானத்திற்குள் வந்து பழுதுபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர்களால் பழுதினை சரி செய்ய முடியவில்லை. இதன்பின்னர் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு 2.15 மணிக்கு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவையும், தூத்துக்குடியில் இருந்து இன்று மாலை 5.45 மணிக்கு சென்னைக்கு புறப்பட இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த விமானத்தில் செல்வதற்காக டிக்கெட் புக் செய்த பயணிகளுக்கு முழு பயணக் கட்டணமும் திருப்பி அளிக்கப்படும் என்றும் அறிவித்தது.
பயணிகள் அவதி
எனினும் சில பயணிகள் உடனே தூத்துக்குடி செல்ல வேண்டும் என்றும் திடீரென ரத்து செய்யப்பட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும்? எனவே மாற்று விமானம் ஏற்பாடு செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அவசரமாக செல்ல இருந்த பயணிகளை மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் டிக்கெட் புக் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சரியான நேரத்தில் விமானத்தின் எந்திரக் கோளாறு இருப்பதை அறிந்து விமானி சுதாரித்துக்கொண்டு விமானத்தை ஓடுபாதையிலேயே நிறுத்தியதால் பெரிய விபத்து ஏதும் நிகழாமல் 75 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி நேரத்தில் சென்னை டூ தூத்துக்குடி, தூத்துக்குடி டூ சென்னை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.












Click it and Unblock the Notifications