வாரம் ரூ.6000.. நாள் முழுக்க உழைத்தாலும் நெருக்கடியில் தவிக்கும் 'கிக்’ தொழிலாளர்கள்! வெளியான ஆய்வு
சென்னை: நாள் முழுக்க ஓடி ஓடி உழைத்தாலும் 'கிக்' தொழிலாளர்களின் நிலை மோசமாகவும், கவலையளிக்கும் விதமாக இருப்பதாகவும் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. சேமிப்பு திட்டங்கள் நிதி மேலாண்மை ஆகியவை மூலம் கிக் தொழிலாளர்கள் நிலை மேம்பட வாய்ப்பு உள்ளதாக இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.
இந்தியாவில் தற்போது உணவு விநியோகம், பொருட்களை டெலிவரி செய்வது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபடும் பணிகளில் லட்சக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர். சென்னை போன்ற பெருநகரங்களில் சாலைகளில் எந்த இடத்தில் பார்த்தாலும் சிட்டாக பறப்பதை காண முடியும். அதேபோல், ஒலா உபேர் போன்றவற்றின் மூலமாக வாடகை கார்களை இயக்கும் ஓட்டுநர்களும் இதில் அடங்குவர்.

எளிதாக சொல்வது என்றால் ஆன்லைன் தளங்கள் மூலமாக வாடிக்கையாளர்களை இணைக்க கூடிய வேலையை பகுதி நேரமாகவோ முழு நேரமாகவோ செய்யும் தொழிலாளர்கள் கிக் தொழிலாளர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு என்று பணி பாதுகாப்பு எதுவும் கிடையாது. அமைப்புசாரா தொழிலாளர்களாக கருதப்படும் இந்த கிக் தொழிலாளர்களுக்கு நல வாரியம் உள்ளிட்டவை அமைப்பது குறித்து தற்போது பரிசீலனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நிதி நிலமை மோசம்: காலையில் இருந்து மாலை வரை ஓடி ஓடி உழைத்தாலும் அவர்களின் நிதி நிலமை மோசமான நிலையிலேயே இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இரண்டு மாதங்களாக கிக் தொழிலாளர்களிடம் இந்த சர்வே நடந்தது. தொலைபேசி மூலமாக தரவுகள் பெறப்பட்டது. 60 சதவிகிதம் பேர் டெலிவரி ரைடர்கள் மற்றும் 40 சதவிகிதம் பேர் கேப் மற்றும் ஆட்டோ டிரைவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வாரத்திற்கு ரூ.6,000: இந்த ஆய்வில், 75 சதவிகித தொழிலாளர்கள் கடுமையான நிதி நெருக்கடியிலேயே தவிப்பது தெரியவந்துள்ளது. அதுபோக பள்ளி இறுதி ஆண்டுக்கு மேல் முடித்தவர்கள் 42% பேரும் பள்ளி படிப்பை மட்டுமே முடித்தவர்கள் 18 சதவிகிதம் பேரும் டிப்ளமோ முடித்தவர்கள் 12 சதவிகிதம் பேரும் இந்த தொழிலில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. வாரத்திற்கு ரூபாய் ஆறாயிரம் வரை மட்டுமே சம்பாதிக்கும் இவர்கள் நிதி மேலாண்மையிலும் கடுமையான சிரமத்தையும் சிக்கலையும் எதிர்கொண்டு வருகிறார்களாம்.
நிதி சுகாதார அளவீடு: சேமிப்பு திட்டங்கள் நிதி மேலாண்மை ஆகியவை மூலம் கிக் தொழிலாளர்கள் நிலை மேம்பட வாய்ப்பு உள்ளதாக இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது. இந்த ஆய்வின் முடிவுகள் குறித்து ஆய்வை நடத்திய அமைப்பின் அன்ஷுல் குர்னா என்பவர் கூறுகையில், கிக் தொழிலாளர்களின் மாறுபட்ட நிலையை வெளிக்காட்டுவது மட்டும் இன்றி அவர்களின் நிதி நிலைகள் பற்றிய தரவுகளும் ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது
"கிக் தொழிலாளர்களின் தேவைகளை மதிப்பிடுவதற்கும், நன்மைகளை ஊக்கப்படுத்தவும் நிதி சுகாதார அளவீடு ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாற வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications