உருமாறிய உயிர்க் கொல்லி நோய்க்கு டெல்டா என பெயர் சூட்டுவதா?.. மக்கள் நீதி மய்யம் கண்டனம்
சென்னை: உருமாறிய உயிர்க் கொல்லி நோய்க்கு டெல்டா என பெயர் சூட்டுவதா என்று மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸுக்கு உலக சுகாதார மையம் டெல்டா என பெயரிட்டுள்ளது. இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் செய்திக் குறிப்பில் கூறுகையில் சீனாவின் வுகான் மாகாணத்தில் 2019-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகையே ஆட்டிப் படைத்து அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இரண்டாவது அலை, மூன்றாவது அலை என தனது கோரப்பிடியை விரிவடையச் செய்து கொண்டே போகிறது.

உருமாறிய கொரோனா
இந்த நிலையில் பல்வேறு நாடுகளில் உருமாறி பரவி வரும் கொரோனா வைரஸுக்கு உலக சுகாதார நிறுவனம் அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப பெயர் சூட்டி வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய வைரஸான பி.1.617.2 என்கிற வைரஸுக்கு தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் மாவட்டங்களை குறிக்கும் பெயரான டெல்டா என சூட்டப்பட்டுள்ளது.

தொழிலாளர் நல அணி
இதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிலாளர் நல அணி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஏற்கெனவே நமது தேசிய தொழிலான விவசாயத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை திணித்து விவசாயத்தையும், விவசாயிகளையும் அழிக்க பன்னாட்டு சக்திகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

உயிர்க்கொல்லி
இந்த சூழலில் உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் உயிர்க் கொல்லி நோயான கொரோனா வைரஸுக்கு உலகிற்கே சோறு போடும் நெற்களஞ்சியமான டெல்டாவின் பெயர் சூட்டுவதை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது. நமது தேசத்தின் முதுகெலும்பாக திகழும் விவசாயத்தின் மீது உலகளாவிய வகையில் பொதுமக்களிடையே அச்சத்தையும், அவப்பெயரையும் உருவாக்க வேண்டும் என்கிற தீய உள்நோக்கத்தோடு உலக சுகாதார நிறுவனம் செயல்படுகிறதோ..? என்கிற பெருத்த சந்தேகம் எழுகிறது.

முதல்வர்
எனவே இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறியுள்ள கொரோனா வைரஸுக்கு உலக சுகாதார நிறுவனம் சூட்டியுள்ள டெல்டா என்கிற பெயரை உடனடியாக திரும்பப் பெற தமிழக அரசு கடுமையாக எதிர்ப்பதோடு அதற்கு பதில் மாற்று பெயர் சூட்ட இந்திய ஒன்றிய அரசையும் , உலக சுகாதார நிறுவனத்தையும் வலியுறுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் அணி சார்பில் தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளக்கம்
இந்த அறிக்கையின் ட்வீட்டிற்கு அவரது கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளனர். அதில் தேவையில்லாத அறிக்கை, இந்த அறிக்கையை டெலிட் செய்யுங்கள், டெல்டா பகுதி என்பது நதி கடலை சென்றடையும் இடம். அது உலகின் எந்த நதியானாலும் சரி.. அது காவிரி படுகையை மட்டும் குறிக்காது. மேலும் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா உள்ளிட்டவை கிரேக்க எழுத்துகளாகும் என தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications