களத்தில் இறங்கும் கமல்.. மணிப்பூர் கலவரத்தை தடுக்கத் தவறிய பாஜக அரசை கண்டித்து மநீம ஆர்ப்பாட்டம்!
சென்னை: மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் மாநில பாஜக அரசை கலைத்திட வலியுறுத்தியும் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.
மணிப்பூரில் மைத்தேயி மற்றும் குக்கி ஆகிய இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் கடந்த மே மாதம் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. வன்முறையில் இதுவரை 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் மாயமாகியுள்ளனர். பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூர் கொடூரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, பாஜக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மணிப்பூர் இனக்கலவரம், வன்முறை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்தும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள மணிப்பூர் மாநில அரசைக் கலைத்திட வலியுறுத்தியும் மக்கள் நீதி மய்யம் சார்பில், வரும் 6-ம் தேதி காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு வள்ளுவர்கோட்டத்திலும், கோவை மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு கோயம்புத்தூரிலும், காஞ்சி மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு காஞ்சிபுரத்திலும், மதுரைமண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு மதுரையிலும், சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு சேலத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

அதேபோல, திருச்சி மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு நாகப்பட்டினத்திலும், நெல்லை மண்டலத்துக்கு உட்பட்டமாவட்டங்களுக்கு திருநெல்வேலியிலும் மற்றும் விழுப்புரம் மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு திட்டக்குடியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மநீம மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள்,உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications