மாலை முரசு கருத்துக் கணிப்பால் அதிமுக பயந்து விட்டது.. காதர் மொய்தீன் கருத்து
சென்னை: மாலை முரசு தொலைக்காட்சியின் கருத்து கணிப்பால் ஆடிப் போயிருக்கிறது அதிமுக அரசு என்று, இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் தெரிவித்துள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
'மாலை முரசு' மாலை நாளேடு பொறுப்புள்ள பத்திரிகை. நாட்டு நடப்புகளைத் தெளிவாக வெளியிட்டு மக்களுக்கு உண்மை நிலவரங்களைப் படம் பிடித்துக் காட்டும் தரமான ஏடு - இந்த ஏட்டின் தொலைக்காட்சியில் வெளிவந்த கருத்துக் கணிப்பு, அஇஅதிமுகவுக்கு எதிராக இருப்பதாகக் கருதிக் கொண்டு மாலை முரசு தொலைக்காட்சியை அரசு கேபிளில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது வன்மையாக கண்டனத்திற்குரியது. பத்திரிகை சுதந்திரத்துக்கு தமிழக அரசு எத்தகைய அவமதிப்பு அளிக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
கருத்து கணிப்பு எங்கும் நடக்கிறது. மாலை முரசு தொலைக்காட்சியின் கருத்து கணிப்பால் ஆடிப் போயிருக்கும் அதிமுக அரசு, தேர்தலில் படு தோல்வி அடையும் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சியமாகி விட்டது. பத்திரிகைகளை முடக்கித் தங்களின் அதிகார ஆணவத்தை காட்டிய எவரும் நீடித்து நின்றதில்லை என்பதே சரித்திரம் சத்தியமாகும். இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.