வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா
சென்னை: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றாலும் தவெகவுக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை. தவெக ஆட்சி 5 வருடங்கள் தொடருமா, கூட்டணி கட்சிகள் என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்கிற சந்தேகங்கள் நிலவுகின்றன. தேர்தலுக்கு பிறகு திமுக கூட்டணி உடைந்துள்ளது. விசிக, ஐயுஎம்எல் ஆகியோர் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். மதிமுகவும் தவெகவுக்கு ஆதரவான கருத்துகளை கூறி வருகிறார்கள். இந்நிலையில் வைகோ பொட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயாராகிவிட்டதாக மல்லை சத்யா கூறியுள்ளார்.
சென்னையில் மதிமுக முன்னாள் நிர்வாகியும், திராவிட வெற்றி கழகம் கட்சியின் தலைவருமான மல்லைய சத்யா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தவெக பக்கம் போவாதற்காக வைகோ பெட்டி, படுக்கையுடன் தயாராகிவிட்டதாகவே அவரின் நடவடிக்கைகளில் தெரிந்து கொள்ள முடிகிறது. தலைவர் வைகோ, தவெக தலைவர் விஜயை பேரறிஞர் அண்ணாவுடன் ஒப்பிடுவதை என்னால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. திருச்சியில் கூட தவெகவுக்கும், திமுகவுக்கும் இடையே தான் போட்டி என்று விஜய் பேசியுள்ளார்.

திமுக தயவில் பதவிகள்
தவெக வெற்றி ஒரு வரலாற்று நிகழ்வு தான். ஆனால் இந்தப் போட்டியில் அல்லு சில்லுகளுக்கு எல்லாம் இடம் கிடையாது என்று அவர் சொல்லியிருப்பது மதிமுகவையும் சேர்த்துதான் என்பதை மறந்துவிடக்கூடாது. திமுக தயவில் தான் தலைவர் வைகோ 29 வருடங்கள் நாடாளுமன்றத்தில் களமாடினார். 4 முறை மேலவை உறுப்பினராக 24 வருடங்களும், 1 முறை மக்களவையில் 5 வருடங்களும் என 29 வருடங்கள் பணியாற்றியுள்ளார். அந்த துரதிர்ஷ்டவசம் தான் அந்த வாய்ப்பை வழங்கியுள்ளது.
அவரின் மகன் திருச்சியில் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றுவதாற்கும் திமுக தான் காரணம் என்பதை அவர்கள் மறந்துவிடக்கூடாது. வைகோ சின்னப்பிள்ளை போல பேசக்கூடாது. விசிக அவர்களின் சின்னத்தில் தான் போட்டியிடுவோம், இவ்வளவு தொகுதிகள் வேண்டும் என்று உறுதியாக சொன்னார்கள். பொதுவுடைமை இயக்கங்கள், ஐயுஎம்எல் கட்சிகளும் அதே நிலைப்பாட்டில் தான் இருந்தன. மக்கள் நீதி மய்யம் எங்களுக்கான உரிய இடம் கிடைக்கவில்லை என்பதால் சுயமரியாதையுடன் வெளியில் நிற்பதாக சொன்னார்கள்.
வைகோ மீது விமர்சனம்
சுயமரியாதை பற்றி வாய் கிழிய பேசும் வைகோ ஏன் அந்தப் பாதையை தேர்ந்தெடுக்கவில்லை. எதற்காக திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார் என்பதை அவர் தான் விளக்க வேண்டும். யார் அவருக்கு அழுத்தம் கொடுத்தார்கள் என்பதை அவர் தான் சொல்ல வேண்டும். இந்நேரம் திமுக வெற்றி பெற்றிருந்தால் தலைவர் வைகோ என்ன பேசுவார் என்பதையும் அனைவரும் அறிவார்கள்.
திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் பல வாய்ப்புகளை பெற்று அவர்கள் பயனடைந்தார்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது. அதை அருகில் இருந்து பார்த்தவன் நான். இன்றைக்கு ஆட்சி இல்லை என்பதால் அவதூறை பரப்புவதும், சேற்றை வாரி இரைப்பதையும் மக்கள் ரசிக்க மாட்டார்கள். உச்சபட்சமாக தமிழக வெற்றி கழகத்தை, திராவிட வெற்றி கழகமாக பார்க்கிறோம் என்று பேசுவைதை திராவிட இயக்கங்கள் ஏற்க மாட்டார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications