கோவையில் தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்ற முயற்சித்தவருக்கு 4 நாள் ஜெயில்.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: கோவையில் தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்ற மருத்துவமனைக்கு செல்லும் வழியில் நடந்த விபத்தில் 3 பேர் பலியான வழக்கில் கேரள மாநில டிரைவருக்கு விதிக்கப்பட்ட ஒரு ஆண்டு சிறை தண்டனையை 4 நாட்களாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. வழக்கில் கைது செய்யப்பட்ட சாகுல் ஹமீது 4 நாட்கள் சிறையில் இருந்த நிலையில், அதனையே தண்டனையாக மாற்றி அவரை விடுவித்துள்ளது உயர்நீதிமன்றம்
கேரளாவைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் கார் டிரைவர் ஆவார். கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி வெங்கடேஷ் என்பவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவரை காரில் ஏற்றிக் கொண்டு, கோவையில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பதற்காக சாகுல் ஹமீது வந்தார். காரை வேகமாக ஓட்டியதால், மார்ச்சநாயக்கன்பாளையம் அருகே வந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்றுக்கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. அதே வேகத்தில் சாலையோரம் நடந்து சென்றுக் கொண்டிருந்த 3 பேர் மீது ஏறி இறங்கி உள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த 3 பேரும் இறந்துவிட்டனர். இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஆனைமலை போலீசார் விபத்து வழக்குப்பதிவு செய்து சாகுல் ஹமீதை கைது செய்து, சிறையில் அடைத்தார்கள். இந்த வழக்கை விசாரித்த பொள்ளாச்சி மாஜிஸ்திரேட் நீதிமன்றம், சாகுல் ஹமீதுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், மொத்தம் ரூ.2,300 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த கோவை செசன்சு கோர்ட், கீழ் கோர்ட்ட வழங்கிய தண்டனையை உறுதி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சாகுல்ஹமீது மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறுகையில், "தற்கொலைக்கு முயன்ற வெங்கடேஷ் என்பவரின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் காரை மனுதாரர் சாகுல் ஹமீது வேகமாக ஓட்டியிருக்கிகறார். இதை அரசு தரப்பில் மறுக்கவில்லை. இதனால் நடந்த விபத்தில் 3 பேர் இறந்துள்ளார்கள். இந்த விபத்தை நேரில் பார்த்த சாட்சிகளில் சிலர் பிறழ் சாட்சியாகி இருக்கிறார்கள்.
இந்த வழக்கில் மனுதாரர் 4 நாட்கள் சிறையில் இருந்திருக்கிறார். இந்த விபத்து 12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்துள்ளது. அதாவது ஒருவரது உயிரை காப்பாற்ற முயற்சிக்கும்போது நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, கீழ் கோர்ட்டு வழங்கிய தண்டனையை மாற்றி அமைக்கிறேன்.
வழக்கில் கைது செய்யப்பட்ட சாகுல் ஹமீது 4 நாட்கள் சிறையில் இருந்திருக்கிறார். சிறையில் இருந்த இந்த காலத்தை தண்டனையாக மாற்றி தீர்ப்பு அளிக்கிறேன். மேலும், அவருக்கு ரூ.60 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன். இந்த தொகையில் தலா ரூ.18 ஆயிரத்தை, விபத்தில் இறந்த 3 பேரின் வாரிசுதாரர்களுக்கு வழங்கவேண்டும்" இவ்வாறு நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications