மூச்சு விடவும் மோடி அரசிடம் டோக்கன் வாங்கணுமா? ஸ்மார்ட் வாட்ச் தடையால் கொதித்த மாணிக்கம் தாகூர்
சென்னை: சென்னை: இந்நிலையில், மூச்சு விடவும் மோடி அரசிடம் டோக்கன் வாங்க வேண்டுமா? என்று காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ள நிலையில், வளாகத்தின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதிப்படுத்த மக்களவை செயலகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள நிலையில், மாணிக்கம் தாகூர் இவ்வாறு கேட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 20ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடர் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கில், மக்களவை செயலகம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மிக முக்கியமான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச்
இப்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் ஸ்மார்ட் கடிகாரங்கள், ஸ்மார்ட் கண்ணாடிகள் மற்றும் பேனா வடிவிலான கேமராக்கள் போன்ற சாதனங்கள் மிக எளிதாகவே கிடைக்கின்றன. இந்த நவீன மின்னணு சாதனங்கள், நாடாளுமன்ற வளாகத்திற்குள் நடைபெறும் விவாதங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை ரகசியமாக படம்பிடிக்கவோ அல்லது ஒலிப்பதிவு செய்யவோ பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இத்தகைய செயல்கள் நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைக் குறைப்பதோடு, உறுப்பினர்களின் அந்தரங்கப் பாதுகாப்பிற்கும், நாடாளுமன்றத்தின் தனி உரிமைகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையக்கூடும். அதனால் நாடாளுமன்ற வளாகத்திற்குள் இத்தகைய நவீன சாதனங்களை உறுப்பினர்கள் பயன்படுத்தக் கூடாது என்று செயலகம் அறிவுறுத்தியுள்ளது.
கத்திகள், வாள்கள்
அதுமட்டுமல்ல, நாடாளுமன்ற வளாகத்திற்குள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மறுபடியும் நினைவூட்டப்பட்டுள்ளது.. நாடாளுமன்ற வளாகத்திற்குள் கத்திகள், வாள்கள், கம்புகள் அல்லது வெடிபொருட்கள் போன்ற எந்தவதிமான அபாயகரமான பொருட்களையும் எடுத்து வரக் கூடாது என்பது ஏற்கனவே உள்ள விதியாகும். இது மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் நுழைவு வாயில்கள் முன்பாக தர்ணாக்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள், அரசியல் முழக்கங்கள் இடுவது அல்லது பதாகைகளை ஏந்துவது போன்ற செயல்களில் உறுப்பினர்கள் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய போராட்டங்கள், அவைக்குப் பணிகளை மேற்கொள்ள வரும் பிற உறுப்பினர்களின் நடமாட்டத்திற்கு மிகுந்த இடையூறுகளை ஏற்படுத்துவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
மக்களவை வேண்டுகோள்
ஜனநாயகத்தின் உயர்ந்த அமைப்பான நாடாளுமன்றத்தின் மாண்பையும், புனிதத்தையும் காப்பது ஒவ்வொரு உறுப்பினரின் கடமையாகும். அந்த வகையில், உறுப்பினர்கள் அனைவரும் இந்த புதிய விதிமுறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி, நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பான மற்றும் சுமூகமான சூழலை உருவாக்க வேண்டும் என்று மக்களவை செயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
எதிர்காலத் தொழில்நுட்ப சவால்களைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை, வரும் கூட்டத்தொடரில் உறுப்பினர்கள் இந்த கட்டுப்பாடுகளைக் கடைபிடிப்பது, அவையின் மாண்பு காக்கப்பட உதவும்.
மாணிக்கம் தாகூர் காட்டம்
இந்நிலையில், மூச்சு விடவும் மோடி அரசிடம் டோக்கன் வாங்க வேண்டுமா? என்று காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்..
நாடாளுமன்றத்திற்குள் போராட்டம் நடத்தக்கூடாது, முழக்கமிடக் கூடாது, ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஸ்மார்ட் கண்ணாடி கூட அணியக்கூடாது, அடுத்ததாக எம்பிக்கள் மூச்சு விடவும் மோடி அரசிடம் டோக்கன் வாங்க வேண்டுமா? நாடாளுமன்றத்தை ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றிவிட்டால் எந்தக் கேள்வியும் எழாது என்று மோடி அரசு கணக்கு போடுகிறது. மக்கள் மன்றத்தில் உங்களின் சர்வாதிகாரம் தவிடுபொடியாவது உறுதி என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.














Click it and Unblock the Notifications