சென்னையில் திரண்ட குக்கி இன மக்கள்.. பற்றி எரியும் மணிப்பூர்! வன்முறைக்கு என்ன காரணம்! பரபர விளக்கம்
சென்னை: மணிப்பூர் மாநிலத்தில் சில மாதங்களாகவே வன்முறை தொடரும் நிலையில், குக்கி இன மக்கள் சென்னையில் போராட்டம் நடத்தினர். அவர்கள் சில முக்கிய கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த சில மாதங்களாகவே மிக மோசமான வன்முறை நடந்து வருகிறது. இதனால் அங்கு ஒட்டுமொத்த மாநிலமும் பற்றி எரிந்து வருகிறது. எங்குப் பார்த்தாலும் வன்முறை இருந்து வந்தது.

மேலும், கடந்த 3 மாதங்களில் அங்குப் பல மோசமான சம்பவங்கள் நடந்ததாகவும் கூறப்படுகிறது. வன்முறையைக் கட்டுப்படுத்த அங்கே இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூர் வன்முறை: இருப்பினும், அங்கு வன்முறை தொடர்ந்தே வருகிறது. அங்கு மைத்தேயி இன மக்களும் குக்கி இன மக்களுக்கும் இடையே மோசமான வன்முறை இருந்து வருகிறது. அங்குள்ள பல இடங்களில் கடைகளும் வீடுகளும் எரிக்கப்பட்டு, தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால் அங்கு ஒட்டுமொத்தமாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே மணிப்பூர் விவகாரம் தொடர்பாகச் சென்னையில் குக்கி இன மக்கள் போராட்டம் நடத்தினர்.
மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர்கள், அங்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போராட்டத்தில் சென்னையில் வசிக்கும் குக்கி சமூக மக்கள் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மணிப்பூர் அரசுக்கும் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
கோரிக்கை: மணிப்பூர் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கு மலைப் பகுதிகளில் குக்கி இன மக்கள் வாழ்கிறார்கள்.. அதேபோல சமவெளிப் பகுதிகளில் மைத்தேயி இன மக்கள் வாழ்கிறார்கள். இப்போது இரு தரப்பிற்கும் இடையே தான் வன்முறை தொடர்ந்து வருகிறது. இதனிடையே அங்கு தங்களுக்குத் தனி நிர்வாகம் தேவை என்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட குக்கி இன மக்கள் வலியுறுத்துகின்றனர். மணிப்பூரில் உள்ள குக்கி இன மக்களின் கோரிக்கையாகவும் இதுவே இருப்பது குறிப்பிடத்தக்கது.
அங்குச் சமவெளிப் பகுதிகளில் இருந்த குக்கி இன மக்கள் மீது கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர். மேலும், சமவெளிப் பகுதிகளில் இருந்த தங்கள் மக்கள் முழுமையாக அகற்றப்பட்டதாகவும் குக்கி இன மக்களின் வீடுகளும் அழிக்கப்பட்டதாகவும் அவர்கள் சாடுகின்றனர். மேலும், வன்முறைச் சம்பவங்கள் இந்தளவுக்கு மோசமாக மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தான் காரணம் என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தங்களுக்கு மிக மோசமான கொடுமை நிகழ்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர்கள், இனிமேல் தங்களால் மைத்தேயி இன மக்களுடன் வாழ முடியாது என்றும் கூறுகின்றனர். இதனால் அங்கு தங்களுக்கு எனத் தனி மாநிலம் தேவை என்பதையும் வலியுறுத்துகின்றனர்.
திருமாவளவன்: முன்னதாக "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் மணிப்பூர் மாநிலத்திற்கு நேரடியாகச் சென்று அங்குள்ள மக்களிடம் நேரடியாக உரையாடினர். அங்குச் சென்று வந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் கிட்டதட்ட இதே கருத்தைத் தெரிவித்தார். மணிப்பூரில் இப்போது இரு தரப்பு மக்களும் இணைந்து வாழவே முடியாத நிலை இருப்பதாக அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications