உயிர் பிரிந்தாலும் மேக்கப்போடதான் போகணும்னு சத்தியம் வாங்கிட்டாரு.. கலங்கிய மனோபாலா மேனேஜர்கள்
சென்னை: தான் இறக்கும்போது கூட ஷூட்டிங் போவது போல் மேக்கப் போட்டுக் கொண்டுதான் போக வேண்டும் என நடிகர் மனோபாலா தனது மேனேஜரிடம் சொல்லி சத்தியம் வாங்கிய நிலையில் அவரது விருப்பத்தை அவரது குடும்பத்தினர் நிறைவேற்றினர்.
மனோபாலா மறைந்து 20 நாட்களுக்கு மேலானாலும் அவர் குறித்து அவ்வப்போது ஒவ்வொரு விஷயம் வெளி வந்து கொண்டே இருக்கின்றன. அவர் கல்லீரல் நோய் தொடர்பாக அவதிப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 3 ஆம் தேதி உயிரிழந்தார்.

இதுவரை மனோபாலாவுக்கு எதிரி என்று யாருமே இல்லாத அளவுக்கு அனைவருடனும் நன்றாக பழகியவர். தன்னிடம் வேலை பார்ப்பவர்களை அதே நிலையில் வைத்திருக்காமல் அவர்களும் முன்னேற வேண்டும் என நினைத்து வெவ்வேறு பணிகளை வழங்கியவர்.
இவரது மறைவு குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு அவருடைய மேனேஜர்கள் சபரியும் விக்கியும் பேட்டி அளித்திருந்தார்கள். அதில் சபரி கூறுகையில், நான் 14 ஆண்டுகளுக்கு முன்பு ஆக்டிங் டிரைவராக மனோபாலா சாரிடம் வேலைக்கு சேர்ந்தேன். பின்னர் எனது பணிகள் பிடித்து போனதால் 3 ஆண்டுகள் கழித்து கால்ஷீட் மேனேஜராக வந்து விடுகிறாயா என அழைத்தார்.
நானும் ஓகே சொல்லி, அவருடன் என் பயணத்தை தொடர்ந்தேன். அன்று முதல் நான் இல்லாமல் எங்குமே செல்ல மாட்டார். காலையில் 6.30 மணிக்கெல்லாம் எனக்கு போன் செய்வார். என்னிடம் பேசாமல் இருக்கவே மாட்டார். வெளிநாடுகளுக்கு சென்றாலும் காசு பற்றி கவலைப்படாமல் எங்களுக்கும் ஏதாவது வாட்ச் போன்ற பெரிய பொருட்களை வாங்கித் தருவார்.
நான் காலில் போட்டிருக்கும் செருப்பு கூட அவர் வாங்கித் தந்தது. அந்த அளவுக்கு என் மீது பாசம். என்னையும் விக்கியையும் அவருடைய மகன்கள் என்றுதான் அழைப்பார். கடைசியாக பொள்ளாச்சியில் ஒரு ஷூட்டிங் நடந்தது. அப்போதுதான் அவர் வயிற்று வலியால் மிகவும் துடித்துள்ளார். நாங்கள் அவருடன் செல்லவில்லை. அதனால் அங்கிருந்தவர் பொள்ளாச்சியில் மருத்துவமனையில் சேர்த்தார்.

அப்போது மிகவும் வலிக்குது, இது ஏதோ எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கிறது என பேசினார். எனக்கும் விக்கிக்கும் மனசு கேக்கவில்லை. உடனை பேருந்தில் டிக்கெட் போட்டுக் கொண்டு பொள்ளாச்சிக்கு போய் கொண்டிருந்தோம். அப்போது சார் எங்களுக்கு போன் செய்து நீங்கள் இங்கே வாருங்கள் என்றார். நாங்கள் சார் ஏற்கெனவே கிளம்பிவிட்டோம் என்றோம்.
நாங்கள் போனதும் எங்கள் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டார். டாக்டர் வந்ததும் என் புள்ளைங்க வந்துட்டாங்க சார் என்றார். அதன்பிறகு அவரை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தோம். பின்னர் குடும்ப டாக்டரிடம் போவதா , பொள்ளாச்சி டாக்டர் பரிந்துரைத்த டாக்டரிம் போவதா என எங்களிடம் யோசனை கேட்டார்.
பிறகு அவர் இறந்த பிறகு அவரது மகன் எங்களுக்கு போன் செய்து அப்பா மூச்சு பேச்சு இல்லாமல் இருக்கிறார் என்றார். உடனே பதறியடித்துக் கொண்டு சைதாப்பேட்டையிலிருந்து நானும் ஈசிஆரில் இருந்து விக்கியும் வந்தோம். நான் முதலில் வந்தேன். அப்போது அவரது கண்களை மூடிவிட்டேன், பிறகு மருத்துவரை வரவழைத்தோம். அவர் பார்த்துவிட்டு உயிர் போய்விட்டது என்றார். அதன் பிறகு அவரை ஹாலில் கொண்டு வந்து வைத்து அவரது கை, கால்களை கட்டினோம்.
அவரது கால்களை கட்டும்போது விக்கி வந்தார். ஆனால் அவர் இறந்தாலும் மேக்கப் போட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும் என எங்களிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார். இதனால் அவரது ஈமச்சடங்கின் போது அவருடைய மேக்கப் பைகளுடன் வழக்கமாக மேக்கப் போடும் ஆர்டிஸ்டை வரவழைத்தோம். ஆனால் ஈமச்சடங்கு செய்த புரோகிதர் அதெல்லாம் செய்யக் கூடாது என்றார்.
பின்னர் அவருடைய மகன் ஹரீஷ், மனோ பாலா சார் மனைவியிடம் பேசியதும் மேக்கப் போட்டுவிட்டார்கள். வெண் தாடிக்கு டை அடித்து நெற்றியில் மெல்லிய விபூதி, குங்குமம் வைத்து அவரை வழியனுப்பினோம். அவருடைய ஒரு ஆசையை நிறைவேற்றிவிட்டோம். அவருடைய இன்னொரு ஆசையான சதுரங்க வேட்டை 2 படத்தை எப்படியும் எடுப்போம் என்று மனோபாலாவின மேனேஜர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications