ஆரணி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. முன்னணி கட்சிகளை முந்திக்கொண்டு அறிவித்தார் மன்சூர் அலிகான்!
சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிடப் போவதாக நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவருமான மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகான், தமிழ் தேசிய புலிகள் என்ற பெயரில் அரசியல் கட்சி நடத்தி வந்தார். அண்மையில் குடியரசு தினத்தன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, தேசிய அரசியல் பயணத்தை தொடங்கினார் நடிகர் மன்சூர் அலிகான். தான் நடத்தி வந்த தமிழ் தேசிய புலிகள் அமைப்பை, இந்திய ஜனநாயக புலிகள் என மாற்றுவதாக அறிவித்தார்.

அதன்படி, தனது இந்திய ஜனநாயக புலிகள் கட்சி பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் மன்சூர் அலிகான். டெல்லிக்கு சென்று இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தனது கட்சி பெயரை பதிவு செய்தார் மன்சூர் அலிகான். இக்கட்சியின் முதல் மாநாடு மற்றும் கட்சி அறிமுகக் கூட்டம் சென்னை பல்லாவரத்தில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெற்றது.
அப்போது, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மடிப்பிச்சை எடுத்தாவது போட்டியிடுவேன். எளியவர்களை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவதே எங்களின் நோக்கம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு என்பதை தங்களது கட்சி நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்துவிட்டு தெரிவிப்பேன் எனக் கூறி இருந்தார் மன்சூர் அலிகான்.
இந்நிலையில், வரும் லோக்சபா தேர்தலில் ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார் மன்சூர் அலிகான். நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், முக்கிய அரசியல் கட்சிகள், தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், மன்சூர் அலிகான் தான் போட்டியிடும் தொகுதியை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பான தனது அறிக்கையில், "மயிலம் மக்கள் மனம், மகிழம்பூவாய் மகிழ! செஞ்சி கோட்டையின் செம்மாந்தர்கள் கொடி பறக்க, செய்யாறு மக்களின் சோற்றில் நெய்யாறு ஓட, நான் சுசுவாசி அல்ல, பந்தா வாசி அல்ல, மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வந்த வாசி! அரசியல் பொதுநல, சந்நியாசி! போளூர் மக்களின் புகழூர் தாய்மார்கள் வயிற்றில் பால் வார்த்திடும், பாலூர், ஆரணியே, அன்ண பட்சினியே, நினை, என் ,மனதின் ஆழ்நிலை சக்தியாய், தாயார், மகளாய் துதித்து, பணி செய்ய, ஆணையிடுவாய், தாழ்திறவாய், தரணி போற்றும், ஆரணியே" என மன்சூர் அலிகான் தெரிவித்துளார்.
மன்சூர் அலிகான் ஏற்கனவே பல தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். 1999ஆம் ஆண்டு பெரியகுளம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிட்டார். கடந்த 2009 லோக்சபா தேர்தலில் திருச்சியில் லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டார். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.












Click it and Unblock the Notifications