அதிமுக கட்சி ஆபீசுக்கு நானாக போகலை.. அவர்கள்தான் அழைத்தார்கள்! மன்சூர் அலிகான் விளக்கம்
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அதிமுக அழைப்பு விடுத்ததன் பேரிலேயே நான் அங்கு சென்றேன் என நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவருமான மன்சூர் அலிகான் இன்று தெளிவுப்படுத்தியுள்ளார். அதிமுக கட்சி அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது.
வேலூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துவிட்டு, அதாவது, தனித்து போட்டியிடுவதாக சொல்லிவிட்டு அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வந்த செய்திகளை அடுத்து மன்சூர் அலிகான் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து மன்சூர் அலிகான் அளித்த பேசுகையில்: அதிமுக அழைப்பின் பேரிலேயே கூட்டணி பேச்சுவார்த்தைக்கு நானும் கட்சி நிர்வாகிகளும் சென்றிருந்தோம். வேறொரு பெரிய கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஒரு தொகுதியிலாவது போட்டியிட உறுதியாக உள்ளோம்.
அதிமுகவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமூகம் எட்டப்படவில்லை, பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். முதலில் ஆரணி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார் மன்சூர் அலிகான். பிறகு வேலூர் தொகுதி என மாற்றம் செய்தார்.
இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை மன்சூர் அலிகானும் அவருடைய கட்சி நிர்வாகிகளும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு சென்றனர். வேலூர் தொகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் கதிர் ஆனந்தும் அதிமுக சார்பில் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகமும் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தான் வென்றார். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் அதிமுக சார்பில் போட்டியிட்ட பி.செங்குட்டுவனிடம் பாஜக சார்பில் போட்டியிட்ட புதிய நீதிக் கட்சியின் ஏ.சி.சண்முகம் தோல்வி அடைந்தார்.
எனவே இந்த தொகுதியில் அதிமுகவுக்கு பலம் குறைவுதான். வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் காங்கிரஸும் திமுகவும் அதிக முறை வென்றுள்ளன. எனவே மன்சூர் அலிகான் அதிமுகவுடன் போட்டியிட்டால் வெற்றி பெறும் வகையிலான ஒரு தொகுதியை கேட்பார். அந்த தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் மன்சூர் அலிகான் போட்டியிடுவார் என தெரிகிறது.
ஒரு வேளை தொகுதி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தால் மன்சூர் அலிகான், சொல்லும் பெரிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி அங்கு கூட்டணி வைத்தாலும் வைக்கலாம். எனவே அரசியலில் எதையுமே ஊகித்ததன் பேரில் உண்மை என சொல்லிவிட முடியாது.
நடிகரும் தமிழ் மண் ஆர்வலருமான மன்சூர் அலிகான் பல தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். 1999ஆம் ஆண்டு பெரியகுளம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிட்டார். கடந்த 2009ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திருச்சியில் லட்சிய திமுக சார்பில் போட்டியிட்டார்.
அந்த கட்சி சார்பில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆரணி எம்பி தொகுதியில் மன்சூர் அலிகான் போட்டியிடுவதாக கூறியிருந்த நிலையில் தற்போது வேலூர் தொகுதியில் போட்டியிடுவதாக கூறியுள்ளார். இதற்காக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications