இனி அடிக்கடி அரசியல் பேச்சு, பரபரப்புகளை தமிழகம் பார்க்கப்போகிறது! ஏன் தெரியுமா?
சென்னை: சூர்யவம்சத்தில் சரத்குமார் கதாப்பாத்திரத்தை பார்த்து, மணிவண்ணன் கதாப்பாத்திரம் சொல்லும், "சின்ராச கையிலயே பிடிக்க முடியாது" என்று.
இந்த டயலாக்கை இடம் பொருளுக்கு ஏற்ப ஒவ்வொருவருக்குமாக மாற்றிக்கொண்டு, மீம் போட்டு வருகிறார்கள். அதுபோலத்தான் ரஜினி திரைப்படங்கள் வெளியாகும்போதும் இந்த மீம்கள் ரொம்பவே பொருந்திப்போவது வழக்கம்.
"படம் ரிலீஸ்னா போதுமே, சின்ராச கையிலயே பிடிக்க முடியாது" என்ற டயலாக்குகளுடன் ரஜினி குறித்து மீம்கள் சுத்தி வரும்.
[கோயிலின் ஐதீகத்தில் யாரும் தலையிடக் கூடாது- சபரிமலை குறித்து ரஜினிகாந்த் கருத்து]

பரபரப்புகள்
இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. பிற நேரங்களில், நீண்ட தியானத்தில் உள்ள முனிவரை போல அமைதிகாக்கும் ரஜினிகாந்த், அவரது படங்கள் ரிலீஸ் ஆகும்போது சர்ச்சைகளின் நாயகனாக விஸ்வரூபம் எடுப்பது இதற்கு முந்தைய நடைமுறையாக உள்ளது. இப்போது ஒன்றல்ல, இரு படங்கள் ரிலீசுக்கு ரெடியாகியுள்ளன.

அடுத்தடுத்து படங்கள்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியாக உள்ள 2.O மற்றும் அதே தயாரிப்பாளர்களின், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாக உள்ள பேட்ட ஆகிய இரு திரைப்படங்கள் குறித்த டாக் சினிமா வட்டாரத்தில் அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில்தான் ரஜினிகாந்த் மீது மீண்டும் ஃபோகஸ் ஆரம்பித்துள்ளது.

திடீர் அறிவிப்பு
எப்படியும் அரசியல் தொடர்பாக ஏதாவது சர்ச்சை கிளம்பும் என்பதே அரசியல் நோக்கர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அட அந்த நோக்கர்களின் வாயில் சர்க்கரைதான் போட வேண்டும். பேட்ட முடிந்து சென்னை திரும்பிய கையோடு, கட்சி பணி 90 சதவீதம் முடிந்துவிட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ரஜினிகாந்த். இதற்கு முன்பாக எப்போது அரசியல் கட்சி என்று கேள்வி எழுப்பியபோது, எத்தனையோ முறை நான் சொல்லிவிட்டேன் என்று கூறிய ரஜினிகாந்த், இம்முறை திடீரென 90 சதவீத பணிகள் முடிந்துவிட்டன என்று கூறியுள்ளார்.

இது ட்ரையல்தான்
ரஜினிகாந்த்தின் இந்த பேட்டியால், அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று சிறு வயது முதலே காத்திருக்கும், இப்போது முதியவர்களாகியுள்ள, அவர்களது ரசிகர்களும் கூட கடும் குஷியாகியுள்ளனர். அவரது பட டயலாக் போலவே, இது வெறும் ட்ரையல்தான். இன்னும் படத்தின் ஆடியோ வெளியீடு, ரிலீஸ் நெருங்க நெருங்கதான், பரபரப்புகளின் மெயின் பிக்சர்களை தமிழகம் பார்க்கும் என்கிறார்கள், அதே அரசியல் நோக்கர்கள். அப்படியா என்று மீண்டும் அழுத்தி கேட்டோம். "பின்ன இதுதான உலக வழக்கம்.." என்று அவர்கள், கண்சிமிட்டியபடியே, தங்களுக்குள் பார்த்துக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருக்கிறார்கள். அப்போ.. 'பேட்ட பராக்' என்று தலைவர் சொன்னது இந்த பரபரப்புகளுக்கும் பொருந்துமோ..












Click it and Unblock the Notifications