சென்னையில் பூத் சிலிப் கிடைக்காததால் பலர் ஓட்டு போட முடியாமல் அவதி.. தேர்தல் ஆணையம் மீது புகார்
சென்னை: சென்னையில் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் வழங்குவதாக அறிவித்த பூத் சிலிப் கிடைக்காததால், நேற்று பொதுமக்கள் எங்கு வாக்களிக்க வேண்டும் என்று தெரியாமல் அவதிப்பட்டதாகவும் பலரும் வாக்களிக்க முடியாமல் போனதாகவும் புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதியான நேற்று ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதன்படி நேற்று காலை 7 மணிக்கு தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச்சாவடி மையங்களில் ஓட்டுப்பதிவு தொடங்கியது.
வாக்களிப்பதற்காக தமிழகத்தில் மொத்தமுள்ள 6 கோடியே 28 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையம்
அத்துடன் அரசியல் கட்சியினர் யாரும் வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்கக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. தேர்தல் ஆணையம் வழங்கிய பூத் சிலிப்பில் வாக்காளர் பெயர், எந்த பள்ளியில் வாக்களிக்க வேண்டும், பூத் எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம் பெற்று இருந்தது.
புகார் எழுந்தது
அதன்படி கடந்த 10 நாட்களுக்கு முன்பே தமிழகத்தில் வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்கும் பணியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபட்டார்கள். ஆனால் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நேற்று முன்தினம் வரை பூத் சிலிப் வழங்கப்படவில்லை என்று புகார் எழுந்தது. தேர்தல் ஆணையர் சத்யபிரபா சாகு உடனடியாக பூத் சிலிப் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறியிருந்தார்.
கிடைக்கவில்லை
ஆனால் பெரும்பாலான வீடுகளுக்கு கடைசி வரை பூத் சிலிப் கிடைக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது. . கொரோனா பரவலை தடுக்க கடந்த முறையைவிட இந்த முறை தமிழகத்தில் கூடுதலாக 22 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அதிகப்படுத்தப்பட்டு 88,937 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடந்தது.
சென்னைவாசிகள்
இதனால் பொதுமக்கள் எந்த வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்று தெரியாமல் தவித்ததாக தேர்தல் ஆணையம் மீது புகார் தெரிவித்தனர். சென்னையில் பலருக்கும் பூத் சிலிப் கிடைக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது. கடந்த தேர்தலிலும் இதுபோன்ற தவறு நடந்தது. தற்போதும் அதே தவறை தேர்தல் ஆணையம் செய்துள்ளது என்றும் சென்னைவாசிகள் சிலர் புகார கூறுகிறார்கள்.