ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு ரெடி.. “குறுக்க யாரும் வந்துடாதீங்க”.. அறிவிப்பில் வந்த எச்சரிக்கை!
சென்னை: தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், வரும் 31 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திருவாரூரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். திமுக தலைமைக் கழகம் இதனை அறிவித்துள்ளது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூரில் பிரச்சாரத்தை தொடங்குகிறார் ஸ்டாலின்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இதையடுத்து நேற்று தொகுதிப் பங்கீடு முழுவதையும் நிறைவு செய்தது திமுக.

இந்நிலையில் திமுக வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக இருக்கும் என்றார். கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு 70 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 164 வேட்பாளர் கொண்ட திமுக வேட்பாளர்களின் பட்டியலை அவர் வெளியிட்டார். மேலும் விரைவில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவிருப்பதாகவும் அவர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ஸ்டாலின், வரும் 31 ஆம் தேதி பிரச்சாரத்தை தொடங்குகிறார். இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்க உள்ளார்.
இதற்கான தொடர் பிரச்சாரத்தை மார்ச் 31 ஆம் தேதி திருவாரூரில் தொடங்க உள்ளார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க. ஸ்டாலின், முதற்கட்டமாக திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் ஊரான திருவாரூரில் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
திருவாரூர் தெற்கு ரத வீதியில் மாலை 5 மணிக்கு இந்த பிரச்சார பொதுக்கூட்டம் தொடங்கும். திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் வேட்பாளர்கள் இதில் கலந்து கொள்வார்கள்.
இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 1ம் தேதி காலை 9 மணிக்கு திருச்சி உழவர் சந்தையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். இதில், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், திருவரங்கம், மணப்பாறை, முசிறி, துறையூர் ஆகிய தொகுதிகளின் சட்டமன்ற வேட்பாளர்கள் கலந்து கொள்வார்கள்.

அன்றைய தினம் மாலை 5 மணிக்கு கரூர் பொதுக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். இதில், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளின் வேட்பாளர்கள் கலந்து கொள்வார்கள்.
ஏப். 2 ஆம் தேதி காலை 9 மணிக்கு ஈரோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், மாலை 5 மணிக்கு கோவை பொதுக்கூட்டத்திலும் மு.க. ஸ்டாலின் உரை நிகழ்த்த உள்ளார். அடுத்த கட்ட பிரச்சார பயண அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திமுக தலைவர் ஸ்டாலின், மேற்குறிப்பிட்டுள்ள இடங்களில் பிரச்சாரத்திற்கு குறித்த நேரத்திற்குள் செல்ல வேண்டியுள்ளதால் காலத்தின் அருமை கருதி, எக்காரணம் கொண்டும் கழகத் தோழர்கள் வழியில் வேறு எவ்வித நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திட வேண்டாமென கண்டிப்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications